காற்று வலுத்து மரங்களைப் பேயாட்டமாடச் செய்யும் சடார் படாரென்று கண்ணாடிக் கதவுகளில் மோதி எறியும் மழைச் சாரலை எதிர்நோக்கிக் கொண்டு அவள் சன்னலுக்கு வெளியே கையை நீட்டிக் கொண்டு நிற்கிறாள்.
அவர்களுடைய ஆசிரமம் இருக்கும் தாழ்வரைப் பகுதிகளில் அந்த மாவட்டத்திலேயே மிகக் குறைவான அளவு மழைதான் பெய்யும். அந்தக் கானங்கள் கூடலூர்ப் பகுதிக் கானகங்களைப் போல் வளமானவை அல்ல. என்றாலும் அந்த மழைக்கே குடிலின் ஓரங்களில் கழுதைகளோ, நாய்களோ, வந்து ஒண்டி நிற்கும். சில சமயங்களில் மான் கூட வருவதுண்டு. ஒரு தடவை செந்நாயொன்று வந்ததாக ரங்கன் சொன்னான். "பேசாமலிரு, அது வந்த வழியே போய்விடும்" என்றாராம் அப்பா. இப்போது சுற்று வட்டம் காட்டையே அழித்து நாடாக்கி விட்டார்கள். மான்கள் கூட வருவதில்லை. ஒருவருக்கொருவர் நம்பிக்கை மாறி அச்சம் தலைதூக்கி நிற்கிறது.
அவள் பார்த்துக் கொண்டே இருக்கையில் வீட்டின் கீழே சாலையின் வளைவில் ஏதோ லாரி வரும் ஓசை. வெளிச்சம் பாய் விரித்தாற் போல் சாலையில் படிகிறது. பிறகு அணைகிறது. சாலை மேலேறிச் சுற்றினாற் போல் வீட்டுக்கு வரும் பாதை... அந்தப் பாதையிலேயே கண்களைப் பதித்துக் கொண்டு அவள் நிற்கிறாள். நெஞ்சத் துடிப்புகள் செவிகளையே நிறைக்க வலுக்கின்றன. அவன் வளைவுப் பாதையில் ஏறி வரவில்லை. குறுக்கே ஏறி நேராக வாயிலில் நிழல் தட்ட வருகிறான்.
அதற்கு முன் கொக்கியைத் திறந்து கிளிக்கென்ற ஓசையுடன் பூட்டைத் திறக்கிறாள் யமுனா.
அவள் அவன் உள்ளே வரும்போது விளக்கைப் போடாமல் ஓரத்தில் விலகி நிற்கிறாள்.
அவன் உள்ளே நுழைந்து கிளிக்கென்று கதவைச் சாத்துகிறான். பிறகு விளக்கைப் போட்டுவிட்டு நேராக அவளைப் பார்க்கிறான். மேலே பளபளக்கும் மெழுகுச் சீலை போன்ற துகிலில் ஜிப்போட்ட ஜாக்கெட்; நெடிது வளர்ந்த தோற்றம். கமலம்மாவின் கம்பீரமான முகத்தின் வார்ப்பு. முடி வாராமல் கலைந்து கிடக்கிறது. முகத்தில் ஒழுங்கு இல்லாத ஐந்தாறு நாளையக் கருமை.