இரட்டிப்புப் பட்டினி விலைக்கு விற்று வயிறு நிரம்பக் குடித்தவர்களை அவள் அறிந்திருக்கிறாள்.
'அம்மா இரட்டிப்புப் பட்டினி விலைக்கு விற்கிறாளா? அல்லது அந்தப் பாவப்பட்ட ஏழைகளுக்குப் பசித்தீ இருக்குமிடத்தில் புரட்சித் தீயை ஒரு பக்கம் துரோகிகள் மூட்ட உதவி செய்கிறாளா? இரண்டு நாட்களாக அம்மாவின் நடப்பில் கரவு காண்பதால் பேச்சில் சரளமில்லை. நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்குக் கூப்பிடவில்லை. யாரிடம் சொல்வது? அம்மாவிடம் சொல்லலாமா? அவளை வயிற்றில் வைத்து வளர்த்த நாள் முதல் அன்பு நெறியே சத்தென்று ஊட்டி இருக்கும் அம்மாவிடமேயா ஐயப்பாடு?'
'ஒருகால் அம்மாவும் இப்போது இந்தப் புரட்சிகளில் நம்பிக்கை கொண்டிருப்பாளோ?'
கண்களை மூடிமூடிப் புரண்டாலும் உறுத்தல் மாய்ந்து குளிர்ந்த உறக்கம் அவளைத் தழுவவில்லை. கண்ணாடிக் கதவுகளைச் சாத்திக் கொண்டு தான் படுத்திருக்கிறார்கள்; அதனால் வெளியே புயலடித்தால் கூட உள்ளே அது அமைதியைக் குலைக்காது. ஆனால் உள்ளத்து அமைதியின்மையை வெளியே பிரதிபலிப்பது போல், செவிகளில் ஏதேதோ மெதுவாக விழுகின்றன.
காற்றில் சருகுகள் பறக்கின்றன.
எழுந்து கதவை நீக்கிப் பார்த்தால் கமலம்மா விழித்து கொள்வார். உண்மையில் அவரும் உறங்குகிறாரோ?
அவள் மெல்ல ஓசைப்படாமல் முன்னறைக்கு வருகிறாள்.
சன்னல் கதவை நீக்கிப் பார்க்கிறாள். தொலைவில் எங்கோ வளைவுச் சாலையில் தெரு விளக்கொன்று தெரிகிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. இரவின் தன்மை கன்னங்களைத் தழுவும் போது இதமாக இருக்கிறது. மலை முகடுகளில் மேகங்கள் குவிகின்றன போலும்.
மக்கள் வேண்டித் தவமிருக்கும் மழை.