விளக்கைப் போடுகிறான். கமலம்மா எழுந்து வரவில்லை.
இது வழக்கமோ?
ஆனால்... வழக்கமாக அவனுக்கு யார் கதவு திறப்பார்களோ?
"நீ சாப்பிட்டாச்சா யமு?"
பரிவு மேலிடும் விசாரணை.
"ஹும், அம்மாவை எழுப்பட்டுமா?"
"வேண்டாம். நான் நேரம் கெட்ட நேரத்தில் வந்தால் கதவைக் கூட இடிக்க மாட்டேன்..."
அவளை நோக்கி, கண்கள் சிறுக்க ஓர் சிரிப்பு.
"பின்னே?"
"அதற்கெல்லாம் வழி இருக்கிறது."
"ஏன் இந்தத் திருட்டுத்தனம்? ஏன் நேர்வழியை விட்டுவிட்டு இப்படி நடமாட வேண்டும்?"
அவனே தட்டுக்களை வைத்துக் கொண்டு ஆறிப்போன ரொட்டியையும் களைக்கோசையும் எடுத்துப் போட்டுக் கொள்கிறான்.
"இதுதானா? நான் சூடாக்கிக் கொண்டு வரட்டுமா?"
"வேண்டாம்; வேண்டாம். உட்கார் யமு. உன்னைப் பார்த்துப் பேசி எத்தனை நாட்களாச்சு! நான் இப்பத்தான் கீதாமஹால் போஸ்டர் பார்த்து உன்னை நினைச்சிட்டு வந்தேன்..."
"நானும் உங்களைப் பார்த்துப் பேசணும்னு உக்காந்திருக்கிறேன், அது தெரியுமா?"