யமுனாவுக்குப் படுக்கை பொருந்தவில்லை. ஜன்னல் கதவுகளைச் சாத்தி இருப்பதால் போலும், மேலும் கம்பளியைப் போட்டுக் கொண்டதும் உடலின் குளிர்ச்சிக்கு அது இதமாக இல்லை. செவிமடல்கள், கண்களில் இலேசான வெம்மை. கம்பளியைத் தள்ளினாலோ உடலின் மேல் குளிர் ஓடுகிறது. ஆனால் உட்சூட்டை அந்தப் புறக்குளிர்ச்சி குறைத்து சமமாக்கவில்லை.
கண்களை மூடினாலும் உறக்கம் கொள்ளவில்லை.
"ராம்...ராம்...ராம்...ராம்...ராம்..."
உதடுகளை மட்டும் அசையச் சொல்லிவிட்டு நெஞ்சம் எங்கோ செல்கிறது.
"அவன் என்ன கொண்டு போகிறான்?"
"அரிசியும் கொஞ்சம் கிழங்குமாவும்."
"எங்கு கொண்டு போகிறான்? எதற்குக் கொண்டு போகிறான்? அவன் யார்?"
கேள்விகள் நாவரையிலும் வந்து தங்கி விடுகின்றன. அம்மா நிற்காமலே அப்பாவின் குடில் பக்கம் போகிறாள்.
"அம்மா!... அம்மா!..."
"சுதீர் அந்தப் பக்கம் எதற்கு நடமாடுகிறானாம்?"
முள்ளியாற்றின் அக்கரை அண்டை மாநிலம். ரங்கனின் அப்பன் அங்கே போய்க் குடித்துவிட்டு மதுவிலக்குச் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவான்.
கூப்பிடு தொலைவில் மின் நிலையம் எழும்பிக் கொண்டு இருக்கையில் இங்கு கிடைக்கும் பங்கீட்டு அரிசியை அரை வயிற்றைக் கால் வயிறாக்கி மீத்து, ஆற்றைத் தாண்டி அப்பால்