போய், படபடத்து மூலைக்கு மூலை ஓடியது.
வாளிச் சத்தமும் கனபாடிகளின் அலறலும் கேட்டுப் பதறி எழுந்த ராவ்ஜியும் கிட்டாவும் ஓடிச் சென்று "கீழே விழுந்துட்டேளா? ஐயோ, என்ன ஆச்சு?" என்று கேட்டுக் கொண்டே கனபாடிகளைத் தூக்கி நிறுத்தினார்கள்.
"வாளி தடுக்கிட்டுதுடா,நல்ல அடி! ரொம்ப வலிக்கிறதுடா, கிட்டா! கால் வீங்கியிருக்கா பாரு!" என்று முனகினார் கனபாடிகள்.
இருவரும் அவரை கைத்தாங்கலாய் அணைத்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
எல்லா துக்கங்களும் சேர்ந்துகொள்ளவே கனபாடிகள் சின்னக் குழந்தைப்போல் அழத் தொடங்கி விட்டார்.
"சிதம்பரம் போய் வரமுடியுமான்னு சந்தேகமாயிருக்கு, கிட்டா ! இன்னும் நாலஞ்சு நாள்தான் இருக்கு. உடம்பில சக்தி குறைஞ்சு போச்சு. ஒரு சின்ன வலிகூடத் தாங்கிக்க முடியலே!" என்று வருத்தப்பட்டார்.
"இப்படி பட்டினிக் கிடந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?" என்றான் கிட்டா.
"இந்தாங்க இந்தப் பாலைக் குடியுங்க. சுடச்சுட காய்ச்சிண்டு வந்திருக்கேன்" என்று சொல்லி கனபாடிகளிடம் பாலைக் கொடுத்தார் ராவ்ஜி. அதை வாங்கிக் குடித்த பிறகுதான் கனபாடிகளுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. சற்று நேரத்துக் கெல்லாம் தூங்கிப் போனார்.
காலையில் எழுந்து கடிகாரத்தைப் பார்த்தவர் இவ்வளவு நேரமாவா தூங்கிட்டேன்! மணி ஒன்பது !" என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டு ஆச்சரியப்பட்டார். அடுத்தகணம் அடிப்பட்ட காலைப் பார்த்து, "ஸ்ஸ்! நன்னா வீங்கிப் போயிருக்கு !" என்றார்.
"நாளைக்குள் சரியாப் போயிடும். இன்னைக்கு நீங்க குளிக்க வேணாம். பேசாமல் படுத்துண்டே இருங்கோ" என்றான் கிட்டா.