Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 22 - சாவி
சுவீகாரம் என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் என்றாலும் கெளரி அத்தை அதை ஒரு கல்யாண வைபோகமாகவே நடத்திவிட ஆசைப்பட்டாள்.
"வாசலில் பெரிய பந்தலாப் போட்டு, வாழை மரம், மாவிலைத் தோரணமெல்லாம் கட்ட ஏற்பாடு பண்ணுங்க" என்று கணவரிடம் ஒரு ‘உத்தரவு’போல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"இது வெறும் வைதிகச் சடங்குதானே? இதை இவ்வளவு ஆடம்பரப்படுத்த வேணுமா?" என்று கேட்டார் அவர்.
வைதிகம், லெளகிகம் ரெண்டும் கலந்தாத்தான் எந்த விசேஷமும் சோபிக்கும். வீடு கட்டி முடிச்சப்போ கிரகப் பிரவேசத்தை ’ஜாம் ஜாம்’னு நடத்தினோம். அப்புறம் எந்த சுப காரியத்துக்கும் வாய்ப்பு இல்லாமப் போயிட்டுதே !" என்றாள்.
ஆமாம், நீ சொல்றதும் சரிதான்" என்று தலையாட்டினார் அவர்.
வெள்ளிப் பாத்திரம், ஜவுளி, சந்தனம், கதம்பம், பழதினுசு எல்லாத்தையும் வாங்கிண்டு மூர்த்தியோடு முதல் நாளே வந்துடணும்னு கிட்டப்பாவுக்குச் சொல்லி அனுப்புங்க. கூடவே சமையல்காராளையும் அழைச்சுண்டு வந்துரட்டும்; கிட்டப்பா வந்தாத்தான் முகூர்த்தமே களைகட்டும் !"
"தஞ்சாவூர்ல நல்ல தாழம்பூ கிடைக்குமா, அத்தை?" என்று நாகுக்காய் ஞாபகப்படுத்தி வைத்தாள் பாகீரதி.
"ஓகோ ! அதை மறந்துட்டனோ ! வாங்கிண்டு வரச் சொல்றேன். மூர்த்தி வரான் இல்லையா! உனக்கு முதல் நாளே தாழம்பூ வெச்சு தலை பின்னிடறேண்டா, கண்ணு" என்று செல்லமாக பாகீரதியின் கன்னத்தைத் தட்டிச் சிரித்தாள் கெளரி.
"நான் தாழம்பூ வச்சுக்கறதுக்கும் மூர்த்தி வரதுக்கும் என்ன சம்பந்தம்? அத்தை என்னத்தை மனசுல வச்சுண்டு இப்படிப் பேசறா?" என்று சந்தேகப்பட்டாள் பாகீரதி.