பாகீரதியின் கவலைதான் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது. பாசம் ஒரு புறமும் தர்மம் ஒரு புறமுமாக நின்று என்னுள் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. என் காலத்திலேயே பாகீரதிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துவிட எண்ணி ஊராரை அழைத்துப் பேசினேன். அவர்களில் யாருமே பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை.
இப்போது நான் எடுத்துள்ள முடிவு உனக்கும் உலகத்துக்கும் ஆச்சரியம் தரலாம்.
வேதத்தையும் தர்மங்களையும் ஊருக்கு போதித்தேன், வேத பாடசாலை நடத்தினேன். இரண்டு முறை யாகங்கள் செய்தேன். சாஸ்திரங்களைப் போற்றினேன். ‘சாஸ்திரத்தை இஷ்டம்போல் நமது வசதிக்கேற்றபடி யெல்லாம் மாற்றக் கூடாது’ என்று வாதாடினேன். இப்போது சோதனையாக, நானே அதை மீறவேண்டிய நிலைக்கு வந்து விட்டேன்.
பாகீரதிக்கு மறுமணம் என்பது சாஸ்திர விரோதம்தான், அதர்மமான காரியம்தான். ஆனாலும் சாஸ்திரத்தை மீறி நான் எடுத்திருக்கும் முடிவு மிகப் பெரிய பாவம் என்பது எனக்குத் தெரியும். இந்த பாவத்துக்குரிய தண்டனையை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
வேதமும் சாஸ்திரமும் புனிதமானது. நிரந்தரமானது; மாற்ற முடியாதது. மாற்றக் கூடாதது. அதை மீறுகிற நான்தான் மகாபாபி.
வேதமும் சாஸ்திரமும் என்னை மன்னிக்கட்டும்.
கெளரி ! எனக்குப் பிறகு பாகீரதியைக் காப்பாற்றும் பொறுப்பை உன்னிடத்தில் விட்டுச் செல்கிறேன். அவளுக்கும் மூர்த்திக்கும் நீ மணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறாய் என்பதை நான் ஒருவாறு ஊகித்து விட்டேன். உன் இஷ்டப்படியே செய். இதில் எனக்குப் பூரண சம்மதமே.
இதனால் கிடைக்கக்கூடிய நல்ல பலன் எதுவானாலும் அது உன்னைச் சேரட்டும். பாவத்தின் பலனை நானே ஏற்றுக்கொள்கிறேன்.
நீ எனக்காகக் கொண்டு வந்து கொடுத்த கங்கையை இப்போது என்மீது கொட்டு. அந்தப்