மணி பன்னிரண்டு!
மூர்த்திக்கு கிட்டப்பா ஆசீர்வாதம். முக்கால் பவுனில் ஒரு மோதிரம்.
கெளரி அத்தை அஞ்சு பவுனில் ஒரு சங்கிலி.
வெள்ளி பஞ்சபாத்திர உத்தரணி - கனபாடிகளின் ஆசீர்வாதம்.
கனபாடிகளை முதலில் நமஸ்காரம் செய்து, அபிவாதையே சொல்லி, அட்சதை ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட மூர்த்தி அடுத்தாற்போல் அத்தைக்கும் அத்திம்பேருக்கும் நமஸ்காரம் செய்தான். அத்துடன் சுவீகார முகூர்த்தம் மங்களவாத்திய இசையுடன் சுபமாக முடிந்தது.
மறுநாள் கனபாடிகள் சீக்கிரமே எழுந்து ஸ்நான பானங்களை முடித்து "பிரயாணத்துக்கு உஷத் காலம் உத்கிருஷ்டம்" என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டார்.
"என்ன அண்ணா அதுக்குள்ள அவசரம் நாளைக்கு நாங்களும்தான் வரப் போறமே எல்லாரும் சேர்ந்து போலாமே!" என்றாள் கெளரி.
"கிட்டாவை அழைச்சுண்டு நான் முன்னாடி போறேன். விராடபர்வம் கதையை ஒரு தடவை முழுக்க படிச்சடணும். ஏகப்பட்ட சுலோகங்கள் ! ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் ! அந்தப் பேர்களையெல்லாம் கதைல ஞாபகமா மறக்காமல் சொல்லணும்" என்றார்.
"அப்படின்னா நீங்க கிட்டாவை அழைச்சுண்டு இப்பவே போங்க. பின் சீட்ல செளகரியமா காலை நீட்டி உட்கார்ந்துண்டு போகலாம்" என்றாள் கெளரி.
“கனபாடிகள் விராடபர்வம் வாசிச்சு இது வரை மழை வராமப் போனதில்லை. இத பார்த்தேளா! முன் ஜாக்கிரதையா குடைகூடக் கொண்டு வந்திருக்கேன்!" என்றார் கிட்டப்பா.
”நீ ரொம்ப நம்பிக்கையோடதான் இருக்கே பார்க்கலாம்" என்று சிரித்துக்கொண்டே புறப்பட்டார் கனபாடிகள்,