தந்தாள் பாகீரதி.
கனபாடிகள் அவளையே சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவர், சட்டென்று கண்களில் பனித்த நீரைத் துடைத்துக் கொண்டு "கிட்டாவுக்கும் கொடும்மா, பாவம் ! அவனுக்குத் தான் சிரமம். மத்தியானத்திலேந்து அலையறான்" என்றார்.
“அர்ஜூனன் அலியா வரானே அப்பா, அந்த அலிக்கு என்ன பேரு சொன்னே?" என்று கேட்டாள் கமலா.
”பிருஹன்னளை !" என்றார்.
அந்த அலியை அவன்னு சொல்றதா, அவள்னு சொல்றதா?" என்று கேட்டாள் கமலா.
“மகாபாரதத்துல எத்தனையோ சந்தேகங்களெல்லாம் இருக்கு. போயும் போயும் உனக்கு இப்படி ஒரு சந்தேகமா?" என்று கேட்டு மெலிதாகச் சிரித்தார் கனபாடிகள்.
கெளரி அத்தை கட்டிக் கற்பூரம் கொளுத்தி வந்து எல்லாரையும் கனபாடிகள் பக்கத்தில் நிற்கச் சொல்லி திருஷ்டி கழித்துப் போட்டாள்.
"உங்க எல்லாரையும் இன்னைக்கு சேர்ந்தாப்ல பாக்கறப்போ எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு, நீங்க அத்தனை பேரும் அக்கறையா வந்து கதை கேட்டதில் பரம திருப்தி எனக்கு. எல்லாரும் க்ஷேமமா இருங்கோ" என்று ஆசீர்வதித்தார்.
"சரி, எல்லாரும் போய்ப் படுத்துத் தூங்குங்க. மழை பலமா வரும்போல இருக்கு. மணி ஒண்ணாகப் போறது" என்றாள் கெளரி.
கனபாடிகள் மெதுவாக எழுந்து போய்த் தம் அறையில் படுத்துக் கொண்டார். தூக்கம் வராததால் எழுந்து உட்கார்ந்து சற்று நேரம் எதையோ படித்துக் கொண்டிருந்தார். வானம் தொடர்ந்து உறுமிக் கொண்டிருந்தது. கனபாடிகள் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து ஏதோ எழுதத் தொடங்கினார். எழுதி முடித்துவிட்டு மறுபடியும் படுத்தார்.