பொழுது விடிந்தது. ராத்திரி பெய்யத் தொடங்கிய மழை ஓயவில்லை. பிரளயமே வந்ததுபோல் பெய்த மழையில் மண்குடிசைகளும் மரம், செடி கொடிகளும் அடியோடு தலைவிரி கோலயாய்ச் சாய்ந்து வீழ்ந்து கிடந்தன. விடிந்த பிறகும் கனபாடிகள் தூங்கிக் கொண்டிருந்தார்.
"என்னை ஆறு மணிக்கெல்லாம் , எழுப்பிடுடான்னு சொல்லிட்டு படுத்தவர் இன்னும் இப்படித் துரங்கறாரே!" என்று வியந்து கொண்டே கனபாடிகள் அறைக்குச் சென்று பார்த்த கிட்டா "அத்தை" என்று வீடே அதிரும்படி கூக்குரலிட்டான்.
"என்னடா?" என்று அலறி அடித்துக் கொண்டு எல்லோரும் கனபாடிகள் படுத்திருந்த அறைக்கு ஒடிச் சென்று பார்த்தார்கள்.
கனபாடிகள், சாந்தமாக, நிம்மதியாக ஆண்டவன் திருவடிகளில் உறங்கிக் கொண்டிருந்தார். அந்த அணில் குஞ்சு கனபாடிகள் இறந்துபோனது தெரியாமல் அவர் மீது ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தது.
கனபாடிகள் எழுதி வைத்த வெள்ளைத்தாள் அவர் பக்கத்தில் கிடந்தது. கிட்டப்பா அதை எடுத்துப் படித்தார்.
அன்புள்ள கெளரிக்கு,
வாளி தடுக்கிக் கீழே விழுந்ததிலிருந்தே, இரண்டு மூன்று நாட்களாகவே என் உடல்நிலை சரியில்லை. வயதானவர்கள் கீழே விழக்கூடாது என்று சொல்வார்கள். சுவீகார முகூர்த்தம் சுபமாக முடிந்ததில் சந்தோஷம். விராடபர்வம் வாசிப்பதாகக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றிவிட்டேன், கொஞ்ச நாளாகவே எனக்கு அவ்வப்போது லேசாக மார்வலி வருவதுண்டு. நீங்களெல்லாம் கவலைப்படுவீர்கள் என்பதால் யாரிடமும் சொல்லாமலிருந்தேன். இப்போதுகூட வலித்துக் கொண்டு
தானிருக்கிறது, என் உயிர் பிரியப் போகும் தருணம் நெருங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. வெளியில் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது. எல்லாம் வீராடபர்வத்தின் மகிமைதான்.