"என்னால ஸ்நானம் பண்ணாமலும் இருக்க முடியாது; பூஜை பண்ணாமலும் இருக்க முடியாது. நான் போய் இதோ குளிச்சுட்டு வந்துடறேன்" என்று எழுந்தார். அந்த நேரம் பார்த்து கனபாடிகளைப் பார்க்க வாசலில் ஒரு பெரிய கூட்டம் வந்து நின்றது.
"விராடபர்வம் வாசிக்கணும்னு உங்களைக் கேட்டுக்கப் போறதா நேத்து அரசமரத்தடில கூட்டம் போட்டுப் பேசிண்டிருந்தா, அவாதான் வந்திருக்கா போலிருக்கு" என்றான் கிட்டா,
"ஓகோ, அப்படியா! பிரம்மணாள் மட்டுமா? குடியானவாளும் வந்திருக்காளா?" என்று கேட்டுவிட்டு அங்க வஸ்திரத்தை எடுத்துப் போர்த்திக்கொண்டவர் "அதோ அந்த கைக்கம்பைக் கொண்டு வா இப்படி" என்றார். கிட்டா கொண்டு வந்த கம்பை வாங்கிப் பார்த்துவிட்டு "ம்! இத்தனை நாள் இதை நான் தொட்டதே இல்லை. எங்கப்பா உபயோகிச்சது!" என்று பெருமையோடு கூறியபடி அதை ஊன்றிக் கொண்டே வாசலுக்கு விந்திவிந்தி நடந்து போனார்.
அவரைப் பார்த்ததும் ஊரார் கையெடுத்துக் கும்பிட்டனர்.
"இந்த வெயில்ல எல்லாருமா எங்க இப்படி..?"
"உங்களைப் பார்க்கத்தான். மழையே இல்லாம பயிர் பச்சையெல்லாம் போயிட்டுது. ஆடுமாடெல்லாம் ஒண்ணு ஒண்ணா செத்துட்டிருக்கு, தாது வருஷத்துப் பஞ்சம் மாதிரி மறுபடியும் வந்துருமோன்னு தோணுது. விதை நெல்லைச் சாப்பிட வேண்டிய கதிக்கு வந்துட்டோம்."
"என்ன சொன்னீங்க ! விதை நெல்லைச் சாப்பிடப் போறீங்களா? ஊஹூம் ! அந்த நிலைக்கு உங்களை நான் ஒரு நாளும் விட மாட்டேன் ! வேதத்துக்கும் விவசாயத்துக்கும் வித்து தானே முக்கியம் ! வித்து அற்றுப்போனா வேதமும் போச்சு, விவசாயமும் போச்சு, பயப்படாதீங்க. ஒரே வாரம் பொறுத்துக்குங்க. நான் வந்து விராடபர்வம் வாசிக்கிறேன்; நிச்சயம் மழை வந்துடும். நம்பிக்கையோடு இருங்க" என்றார்.
"ஒரு வாரமா! நாளைக்கே ஆரம்பிச்சுட முடியாதா?" என்று கேட்டான் ஒரு விவசாயி.