ராம் சொல்ல முதலில் அரிசி மாவு.... அது போதாமல் சிறிது சோள மாவு என்று ஒரு ஒரு மாவாக சேர்த்து அடுப்பில் வைக்க சிறிது நேரத்தில் அது சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்தது.... மிகச் சரியாக வீட்டு அழைப்பு மணி அடிக்க க்ளாடியாவிற்கு கை கால் உதற ஆரம்பித்தது... ராம் அவளுக்கு தைரியம் சொல்லி, மறக்காமல் சப்பாத்தி மாவு பாயசத்தை எடுத்து கப்போர்டு கடைசி ஷெல்பில் வைத்துவிட்டு சென்று கதவை திறந்தான்...
கதவைத் திறந்தவுடன் வந்த உருவத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.... ராமின் பாட்டியை வீல்சேரில் ஒருவர் தள்ளியபடி இருக்க, பக்கத்தில் மற்றொருவர் அவரின் துணிகள் அடங்கிய பையை பிடித்திருந்தார்...
“என்னாச்சு பாட்டி... கால்ல அடிபட்டுடுச்சா... நேத்து பேசும்போது கூட நீங்க ஒண்ணும் சொல்லலை.....”, ராம் போட்ட கத்தலில் சமயலறையில் துக்கத்தில் இருந்த க்ளாடியா ஓடி வந்தாள்....
“டேய் ராம் சத்தமா பேசாதடா... மொதல்ல இவனுங்க ரெண்டு பேரையும் அனுப்பு...”, அந்த லைனை முடிப்பதற்குள் எழுந்து டாய்லெட்டை நோக்கி ஓடினாள் பாட்டி...
அவரின் கூட வந்தவர்கள் பாட்டிக்கு உடம்பு சரியில்லாத காரணத்தால் தாங்கள் உடன் வந்ததாகவும்... அவரை விட்டுவிட்டு உடனே தாங்கள் செல்ல வேண்டும் என்றும் கூறி பாட்டியின் பொருட்கள் அடங்கிய பையை ராமிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்...
பத்து நிமிடம் கழித்து சக்தியெல்லாம் வடிய வேர்த்து விறுவிறுத்து பாத்ரூமிலிருந்து வெளியில் வந்தார் பாட்டி....
“பாட்டி என்ன ஆச்சு உங்களுக்கு... ஏன் இப்படி இருக்கீங்க...”
“எல்லாம் அந்த நாசமா போன ஆர்கனைஸரால வந்தது.... சுவிட்சர்லாந்துலையே பெரிய ஹோட்டல் அப்படின்னு எங்கியோ கூட்டிட்டு போனான்... இங்க காரக்குழம்பு நல்லா இருக்கும் சாப்பிட்டு பாருங்கன்னு சொல்லிட்டு என்னத்தையோ வாங்கிக்கொடுத்தான்... அது சாப்பிட்டு அடுத்த அரைமணில ஆரம்பிச்சதுதான்.... இன்னும் நிக்காம போகுது...”
“பாட்டிமா don’t worry.... நா உனை பார்க்குது.... டாக்டர் பேலாமா (நான் உங்களைப் பார்த்துக்கொள்கிறேன்... டாக்டரிடம் போகலாமா)”
“ஏண்டா ராம் பிரெஞ்சும் தமிழ் மாதிரியே இருக்குமா... உன் பொண்டாட்டி பேசினதுல ஒண்ணு ரெண்டு தமிழ் வார்த்தை வருது....”
“பாட்டி ஆனாலும் உங்களுக்கு ரொம்பக் குசும்பு... அவ இப்போ பேசினது தமிழ் பாட்டி....”
“என்னது தமிழா.... டேய் ராம்... எனக்கு வயிறு வலியோட சேர்ந்து நெஞ்சு வலியும் வந்துடும் போலயே இவ பேசறதை கேட்டு...”, பாட்டி சொல்ல க்ளாடியா ராமை முறைத்தாள்...
என்னதான் பாட்டி க்ளாடியாவை நக்கலடித்து பலவிதமாக பேசினாலும் பொறுத்துக்கொண்டு அடுத்த இரண்டு நாட்களும் பாட்டியை கண் போலப் பார்த்துக்கொண்டாள்... அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று டாக்டர் சொல்வதை கவனமுடன் கேட்டு அதன்படியே நடந்து கொண்டாள்...
க்ளாடியாவிற்கு இந்திய உணவுகள் சமைப்பதுதான் பிரச்சனையே தவிர பிரெஞ்சு உணவுகள் சமைப்பதில் அவள் கில்லாடி... அதனால் சூப், கஞ்சி என்று வேளைக்கு ஒன்றாக செய்து பாட்டியை இரண்டு நாளிலேயே சுவிட்சர்லாந்தை வலம் வரும் அளவுக்கு தேற்றி விட்டாள்.... தனக்காக வேலைக்குப் போகாமல் லீவ் போட்டு குழந்தையைப் போல் பார்த்துக்கொள்ளும் க்ளாடியாவைப் பார்த்து தான் முன்பு அவளை நடத்தியதை எண்ணி பாட்டிக்கு வெட்கம் வந்தது...
“க்ளாடியா என்னை மன்னிச்சுடு... பெரியவளா இருந்தும் ஜாதி, மதம்ன்னு பார்த்து உன்னை ரொம்ப நோகடிச்சுட்டேன்... நான் உன்னை எவ்வளவோ குத்தலா பேசியும் நீ அதைக் கணக்கில் கொள்ளாம என்னைப் பார்த்துக்கிட்ட... உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை...”
“பாட்டிம்மா no emotions.... இது என்க்கு duty... பாட்டிம்மா good health ஆகுது... நாங்க zermart பார்க்க போகுது....”
“கண்டிப்பா போகலாம்டா... அதுக்கு முன்ன நாளைக்கு தமிழ் வருஷப்பிறப்பு... அதுக்கு உனக்கு என் கையால நானே சமைச்சு போடறேன்...”
பாட்டி கூற, “ஹப்பாடி க்ளாடியாவோட பலாப்பழ பாயசத்திலிருந்து நான் கிரேட் எஸ்கேப்”, என்று ராம் கூற, க்ளாடியா அவனை செல்லமாக முறைத்தாள். ராமிற்குதானே தெரியும், பாயசம் என்ற பெயரில் அவள் செய்த வஸ்துவை டிஸ்போஸ் செய்ய பட்ட கஷ்டம்...
மறுநாள் தமிழ் புத்தாண்டு அன்று பாட்டியும், பேத்தியுமாக பாயசத்தை அற்புதமாக செய்து அசத்தினார்கள்...
{kunena_discuss:785}