சிறுகதை - பட்டாம் பூச்சி – முகிலா
ஒவ்வொரு மனிதனின் மனதில் பதியக் கூடிய வசந்த காலம் பள்ளிப் பருவமே.. காட்டில் திரியும் மான் கூட்டம் போல் துள்ளி குதித்து சிறகடிக்கும் பருவம் அது..
புலருகின்ற ஒவ்வொரு பொழுதும் தனக்கானதாக்கி எந்தக் கவலையுமின்றி சுற்றித் திரியும் காலம் பள்ளிப் பருவம் மட்டுமே..
சிலர் அப்பருவம் திரும்பி வராதா என்று ஏங்கி கிடக்கிறோம்.. வெகு சிலர் அப்பருவம் தன் வாழ்வில் ஏன் வந்தது என்று தவித்து கிடக்கின்றனர்..
ஏன்..??
ஸ்கூல் பஸ்ஸின் ஹாரன் ஒலி கேட்டதும் தன் மகளின் வரவிற்காக கேட்டைத் திறந்து விட்டார் பவானி..
ஸ்கூல் பாக்கை இரண்டு புறம் மாட்டிக்கொண்டு வலது கையில் சிறு லஞ்ச் பேக்குடன் சோர்வாக வீட்டிற்குள் நுழைந்தாள் பிரதன்யா..
“என்னாச்சு இவளுக்கு.. ஏன் இவ்வள்ளவு சோர்வு..”,என்று மனதில் நினைத்த பவானி,”பிரதி.. ஏண்டா டல்லா இருக்க..??”,என்று கேட்டார்..
ஏதோ சொல்ல வாய் திறந்தவள் சற்றே சுதாரித்து கண்ணில் பரவும் நீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “படிக்குறதுக்கு நெறையா கொடுக்கறாங்க..”,என்று விட்டு தன் அறைக்குள் முடங்கினாள்..
அவளது ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பவானிக்கு அவள் ஏதோ சொல்ல வந்ததும் அவளது கண்ணீரும் கண்ணில் தப்பாமல் விழுந்தது..
அவள் பின்னே அவள் அறைக்கு சென்றவர் அவர் படுக்கையில் சோர்வாக படுப்பது கண்டு,”என்னடா ஆச்சு..??”,என்று கேட்டார்..
“தூக்கம் வருது மா..”,என கண் மூடி படுத்தவளை தொந்தரவு செய்ய மனமில்லாமல் வெளியே வந்தவருக்கு மனதில் ஏதோ உறுத்தல்..
கடந்த ஒரு மாதமாக அவள் அமைதியாக மாறிப்போயிருந்தது கண்ணில் பட்டாலும் எக்ஸாம் நெருங்குவதால் எக்ஸாம் டென்ஷன் என்று நினைத்திருந்தவர் அவளது இன்றைய நடவடிக்கை கண்டு குழம்பித் தான் போனார்..
இப்பொழுது அவள் நன்றாய் தூங்கட்டும்.. அவசரப்பட வேண்டாம்.. எதுவாக இருந்தாலும் அவர் வந்தவுடன் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று தனக்குத் தானே மனத்தில் முடிவெடுத்தவர் தனது வேலைகளை கவனிக்கத் துவங்கினார் தனக்கு முன்னே தனது மகள் அவசரமாய் எடுத்திருக்கும் முடிவு தெரியாமல்..
ரிக்கவர் மருத்துவமனை.. தீவிர சிகிச்சைப் பிரிவு..
கடந்த ஒரு மணி நேரமாக டாக்டரின் வரவிற்காய் பதற்றத்துடனும் பயத்துடனும் ஐ சி யூ’ விற்கு வெளியே காத்திருந்தனர் பவானியும் சிவாவும்..
கண்களில் நிற்காமல் நீர் வழிந்து கொண்டிருந்தது பவானிக்கு..
மகள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடனேயே என்ன பிரச்சனை என அவளிடம் பொறுமையாகக் கேட்டறிந்திருந்தால் என் பிரதி இங்கிருந்திருக்கமாட்டேளே என்று அவரது மனது கூவி ஓலமிட்டது..
“நம்..ம பி..ர..திக்கு ஒன்..னும் ஆகா..துல..??”,திக்கித் திணறியபடி கேட்டார் பவானி பயத்துடன்..
பிரதி செய்த செயல் சிவாவிற்கு வலியைத் தந்திருந்தாலும் அதை விழுங்கியபடியே,“ஒன்னும் ஆகாது வாணி.. நம்ம பொண்ணுக்கு ஒண்ணுமே ஆகாது..”,என்று தனக்கும் சேர்த்து சமாதானம் சொல்லிக்கொண்டார் சிவா..
சற்று நேரம் அமைதியாக இருந்த பவானி மீண்டும்,“ஏங்க என்னால் தான் எல்லாம்.. வந்ததில் இருந்து அவ முகமே சரியில்லை.. அப்போவே கேட்டிருக்கனும்..”, தன் மேல் தவறென்பது போல் புலம்பிக் கொண்டிருந்த மனைவியை காண்கையில் சிவாவின் மனதில் உதிரம் உதிராக் குறைதான்..
அந்நேரம் வெளி வந்த டாக்டர் மனோரஞ்சன், “உங்க பொண்ணோட ஸ்டொமக் கிளீன் பண்ணியாச்சு.. இனி எந்த ப்ராப்ளமும் இல்லை..”,என்றார்..
நிம்மதி பெருமூச்சொன்றை விட்ட சிவா,“ரொம்ப நன்றி சார்.. பிரதியை இப்போ பார்க்க முடியுமா சார்..??”,என்று தயக்கமாக கேட்டார்..
“ஒரு பத்து மணி நேரம் அவங்க மயக்கத்தில் இருப்பாங்க..”,என்றவர் பவானியின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளைக் கண்டு,”அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க..”,என்றுரைத்த அடுத்த நிமிடம் பிரதியின் அருகில் இருந்தார் பவானி..
இரண்டு வாரத்திற்கு பிறகு..
டாக்டர் மனோரஞ்சனின் அறிவுரையின் படி பிரதன்யாவை அழைத்துக்கொண்டு சிவாவும் பவானியும் சைக்ராடிஸ்ட் ரேவதியிடம் வந்திருந்தனர்..
பிரதன்யாயும் ரேவதியும் கவுன்சிலிங் ரூமில் இருக்க சிவாவும் பவானியும் கன்சல்டிங் ரூமில் இருந்த படி அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர்..
பிரதன்யாவிடம் பிடித்தது பிடிக்காதது என்று பொதுவான விஷயங்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார் ரேவதி..
அனைத்திற்கும் ஒற்றை வார்த்தையே அவருக்கு பதிலாய் கிடைத்துக்கொண்டிருந்தது..
“உங்களுக்கு பிடிக்காத சப்ஜெக்ட் என்ன..??”,என்று கேட்டார் ரேவதி..