(Reading time: 12 - 24 minutes)

“ஸ்விட் நா எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு வாங்கி தருவியா பா” ஆவலோடு கேட்டான் ரகு.

விஜய்க்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. உலகின் கடைசி மாமரமும் அழிந்து விட்டது, கடைசி பழத்தையும், காட்சிப் பொருள் ஆக்கிவிட்டார்கள். பின்பு எங்கே போய் தன் மகனுக்கு மாம்பழம் வாங்கித் தர முடியும்.

“இல்ல பா இனிமேல் அந்தப் பழம் கிடைக்காது. வாங்கவும் முடியாது” என்று பதில் கூறினான் அவன்.

அதைக் கேட்டு சோகமானான் ரகு. “நீங்க மாம்பழம் சாப்பிடுருக்கீங்களா பா” என்று அடுத்த கேள்வி கேட்டான்.

“சாப்பிட்டுருக்கேன் பா” என்று விஜய் கூறும் போதே அவன் ஞாபகம் முழுதும் அவனுக்குப் பிடித்த மாம்பழத்தைச் சுவைத்த நாட்கள் பக்கம் சென்றது.

“உங்களுக்கு யார் வாங்கிக் கொடுத்தது. தாத்தாவா” என்று ரகுவின் அடுத்த கேள்வி. அவனும் விடுவதாக இல்லை.

“ஆமாம் பா. அது மட்டும் இல்ல நான் உன் வயசுல இருக்கும் போது நம்ம வீட்டிலேயே ஒரு மாமரம் இருந்தது. என் தாத்தா எனக்குப் பரிசா கொடுத்தது” என்று தன் சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டான்.

தந்தை மகனின் உரையாடலை அமைதியாகக் கவனித்து கொண்டு இருந்த ராஜேஷ்ற்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.

“அப்பா, எங்கப்பா அந்த மரம். என்ன ஆச்சி அந்த மரத்துக்கு” என்று தன் தந்தையிடம் ஆர்வமாய் கேட்டான் ரகு.

“இல்ல பா அந்த மரத்தை உன் தாத்தா வெட்டி விட்டார்” என்று ரகுவிற்கு நடந்ததைக் கூறினான் விஜய்.

“ஏன் தாத்தா வெட்டினீங்க, உங்களாலதான் என்னால அந்த ஸ்வீட் ஃபுரூட் சாப்பிட முடியாமல் போச்சி”  என்று தன் தாத்தாவிடம் கோவமாக கேட்டான் ரகு.

அதற்குப் பதில் ஏதும் கூற முடியாமல், அமைதியாக இருந்தான் ராஜேஷ்.

“ஏன் பா அமைதியா இருக்கீங்க. அந்த மரத்த வெட்டினப்போ நான் எவ்வளவு கெஞ்சினேன் உங்க கிட்ட, வேண்டாம் பா நு. அப்போ எவ்வளவு சமாதானம் சொன்னீங்க எனக்கு. அதை அப்படியே உங்க பேரன் கிட்டச் சொல்ல வேண்டியது தானே” என்று தன் தந்தையை பார்த்துக் கேட்டான் விஜய்.

அதற்கும் ரஜேஷிடம் இருந்து மௌனம் மட்டுமே பதிலாய் வந்தது.

“உங்களுக்கு ஞாபகம் இருக்காப்பா, அந்த மரத்தை வெட்டினப்ப சொன்னீங்க, காசு இருக்கு, எனக்கு, என் ஃபெரெண்ட்ஸ் எல்லாருக்கும் மேங்கோ வாங்கி தருவேனு, இப்போவும்தான் நம்மகிட்ட காசு இருக்கு, உங்க பேரனுக்கு வாங்கி கொடுங்கபா. அதான் நம்மகிட்ட நிறையக் காசு இருக்கே, உங்க பேரனுக்கு, மேங்கோ மட்டும் இல்ல, ஆப்பிள், ஆரஞ் நு நாம் அழிச்ச எல்லா பழத்தையும் வாங்கி கொடுங்க பா பார்ப்போம்.” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் விஜய்.

“நீங்க மட்டும் இல்ல பா, நீங்க நா, இப்படி நம்ம தலைமுறையே காசு பணம் நு அது பின்னாடியே ஓடி காசு சம்பாதிச்சோம், வீடு வாங்குனோம், கார் வாங்குனோம். ஆனால் பாதுகாக்க வேண்டிய மரங்கள், பறவைகள் என எல்லா வளங்களையும் அழிச்சிட்டோம். நீங்க உங்க காலத்தில் தோட்டத்தில் இருந்து ப்ரெஷ்ஸ மாம்பழம் சாப்பிடீங்க. உங்க பையன் எனக்குக் காசு கொடுத்து கவருல வாங்கிட்டு வந்து கொடுத்தீங்க. இப்போ என் பிள்ளைக்கு நான் டிவிலையும், படத்திலும் காட்ட வேண்டிய நிலைமை வந்துடுச்சு. அப்படி எல்லாத்தையும் அழிச்சி சம்பாதித்த காச வச்சி நிம்மதியாவா இருக்கோம், காற்றை வாங்குறோம், தண்ணீரை வாங்குறோம், எல்லாத்துக் கூடவும் சேர்த்து நோயை விலை கெடுத்து வாங்கிட்டு இருக்கோம். இதற்கெல்லாம் என்ன பா சமாதானம் சொல்லபோறீங்க, சொல்லுங்கப்பா, ஏன் அமைதியா இருக்கீங்க. பேசுங்கப்பா பேசுங்க” என்று கேட்கும் போதே உடைந்து அழுதான் விஜய்.

வெளியே இருக்கும் வெயிலை விட விஜயின் வார்த்தைகள் ராஜேஷை சுட்டது.

“என்ன மண்ணிச்சிடு பா, நான் அந்த மரத்தை வெட்டினது தவறுதான், என்ன மண்ணிச்சுடு, ஸாரி” என்று புலம்பியவனை, “என்னங்க, என்ன ஆச்சி ஏன் தூக்கத்தில் புலம்புறீங்க” என்று தட்டி எழுப்பினாள் ராஜேஷ்யின் மனைவி கீதா.

திடுக்கிட்டு எழுத்து அமர்ந்தவனின் கண்களின் எதிரே தெங்கி கொண்டிருந்த கேலேண்டர் தென்பட அது 2018 எனத் தேதி காட்டியது. அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, சற்று முன் நடந்த அனைத்தும் தான் கண்ட கனவு என்று.

“என்னங்க, என்ன ஆச்சி. யாருக்கிட்ட தூக்கத்தில் மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருந்தீங்க” என்று கீதா பதற்றமாய் கேட்டாள்.

“அது ஒண்ணும் இல்ல கீதா, ஒரு கெட்ட கனவு அவ்வளவுதான்” என்று தன் மனைவியிடம் அவன் கூறினாலும், அவன் அறிவுக் கண்களை திறந்து வைத்த கனவு அது.

“ஒ சரிங்க, பக்கத்தில தண்ணீர் இருக்கு குடிங்க சரியா போயிடும். அப்பறம் மரம் வெட்டுரதுக்கு ஆள் வர சொல்லி இருந்திங்களே, வந்திருக்காங்க வாங்க” என்று தகவல் கூறினாள் கீதா.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.