சிறுகதை - ஒரு கதையால் நினைவூட்டப்பட்ட தேவதை - அனுசுயா
நல்ல கதைக்கான இலக்கணம் என்பதை தீர்மானிக்கும் உரிமை கதையை படிக்கும் வாசகனுக்கு சொந்தம் என்பது என்னுட ஆணித்தரமான நம்பிக்கை.குப்பை, சுமார், சூப்பர் , அதியற்புதம் என்ற 4 பிரிவுகளுக்குள் ஒரு கதையை அடக்கிவிடலாம்.
ஏண்டா இந்த கதையை படித்தோம் என நினைக்கும்படி செய்தால் அதுகுப்பை.ஏதோ படித்தோம் ஒ.கே. என நினைக்க வைத்தால் அது சுமார். படித்து முடித்த பிறகும்கூட , அந்த கதை மாந்தர்களின் பாதிரப்படைப்போ , கதாசிரியர் அதை கையாண்ட விதமோ, இல்லை எழுத்து நடையின் சுவாரசியமோ நம்மை வெகுவாக பாதித்தால் அந்த கதை சூப்பர் என முத்திரை குத்தலாம்.
மேற்கூறிய வரைமுறைகளை தாண்டி ஒரு கதையை படித்த பிறகு அக்கதையின் பாதிப்பு உங்களையும் ஒரு கதையை எழுத தூண்டினால்? அது அதியற்புதம்...அப்படியாக இந்த கதையை என்னை எழுத தூண்டிய அற்புதத்தை நிகழ்த்திய இருவரில் ஒருவர் - விகடன்! அப்போ மற்றொருவர் - ந.கோ !
சில மாதங்களுக்கு முன்பாக விகடனில் வெளியான குர்குர்ராங் கதை தான் இந்த கதையை எழுத என்னை தூண்டிவிட்டது. தூண்டப்பட்டது நானாக இருப்பினும், தூண்டியது விகடனில் வெளியான கதையாக இருப்பினும், அந்தர்யாமியாக இக்கதையின் கருவாக இருப்பவன் - ந.கோ
முன் குறிப்பு - மேற்கொண்டு கதையை தொடர்வதற்கு முன், என் பூர்விக கிராமத்தின் பெயரை இந்த கதையின் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிட்டாலும் நான் பலவேறு சிக்கல்களுக்கு ஆளாக வேண்டி வரும் என்பது சர்வ நிச்சயமாய் எனக்கு தெரியுமாதலால் , கடைசிவரை ஊரை சொன்னாலும் ஊரின் பேரை சொல்வதில்லை என முடிவெடுத்து இருக்கிறேன்
-> ஏண்டா ? அந்த லூச விட்ட வேற சகவாசமே உனக்கு கிடைக்காதா?
->சரியான பித்துக்குளிடா அவன். மனுஷாள விட்டுட்டு , நாய் கூட, மாடு கூட எல்லாம் பேசிண்டு அலையறான்.
->அவன் கூட பழகி பழகி , சமயத்துல நீ பேசறதை பார்த்தா, அவனா இல்ல நீயான்னு சந்தேகம் வரதுடா
மேற்கூறிய வசனங்கள் 95 களில் எங்கள் அக்ரஹாரதில் உள்ள எழுபதிசொச்சம் வீடுகளுள், ந.கோ உடன் பழகும் அனைவர் வீடுகளிலும் ஒலித்தது . பிறர்க்கு ஏதானும் பிரச்னை என்றால், நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கி கொள்ளும் சாணக்கிய தந்திரத்தை கையாளும் எங்கள் அக்ரஹார பெரிய மனிதர்கள் ஒன்றுபடும் சில விஷயங்களுள் ஒன்று - மேற்சொன்ன “அவனை” வசைபாடத்தான்
சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல , தளபதி இவ்வளவு ஏன் , பவர் ஸ்டார் போன்ற அடைமொழிகள் இன்ன நடிகர்களுக்கு சொந்தம் என தமிழ் நாட்டு பிரஜைகள் அடையாளம் கண்டு கொள்வதை போல, அவன் என்ற சொல்லால் எங்கள் அக்ரஹார பிரஜைகளால் அறியப்பட்ட அவன் - ந.கோ. என்ற புனைபெயரை உடைய நந்த கோபாலன்.
முதல் தடவையாக மட்டுமில்லாமல், 300 வது தடவையாக எவரேனும் எங்கள் ந.கோ வை பார்த்தாலும், பிதாமகன் பட விக்ரமை பார்ப்பது போலதான் பார்பார்கள். இத்தனைக்கும் அஹோரி தாடியோ , அதி பயங்கர ஆக்ருதியோ இல்லாதவன் .ஆனால், அவன் பேசுவதை கேட்க பொறுமை இல்லாதவர்களும் , பொறுமையுடன் கேட்டாலும் அவன் சொல்வதை புரிந்து கொள்ள முடியாதவர்களும், “அவன் இருக்கானே” என வசை பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்
எங்கள் நண்பர்குழாமை பொருத்தமட்டில் நா.கோ ஒன்றும் புரிந்து கொள்ள முடியாத புதிர் இல்லை, இன்னும் சொல்ல போனால் , அவனை புரிந்து கொள்ள பொறுமை இல்லாத பதர்களால் புறக்கணிக்கப்பட்ட , தி சோ கால்டு - " போக்கனான் கெட்ட பிராமணன்"
ந.கோ. வுடனான நட்பை விரும்பும் சில ஆத்மாக்களுள் நானும் ஒருவன். எங்களைவிட 13 வயது மூத்தவன் தான். இருந்தாலும், போடா வாடா என ஒருமையில் தான் அழைப்போம்.
நா.கோ வுடனான எங்கள் நட்பினை பிடிக்காமல் எங்கள் குழுவில் இருந்த அத்தனை பேரது வீடுகளிலும் கண்டன தீர்மானங்கள் பல முறை நிறைவேற்றப்பட்டன. அதற்குக்காரணம், அவனுடன் பழகினால் எங்களையும் ஊரார் பைத்தியம் என பட்டம் கட்டி விட்டு விடுவர் என எங்கள் வீடுகளில் திடமாக நம்பப்பட்டது.
அதையெல்லாம் பொருட்படுத்தாது "அவன்" உடனான எங்கள் கூட்டணியை நாங்கள் தொடர்ந்தோம் . இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு காரணத்தினால் நாங்கள் ந.கோ.வின் பால் ஈர்க்க பட்டிருந்தோம்.
அம்மா, நகோ உடனான என் நட்பை திட்டினாலும், அப்பா என்னை ஒரு முறை கூட அவனுடன் பேசுவதற்காக திட்டியதில்லை.என் அப்பாவிற்கு ந.கோ.வின் மீது ஒரு மாதிரியான கரிசனம் இருந்திருப்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.
எங்கள் மத்தியில் ந.கோ.பிரபலமாக இருந்ததற்கு பல காரணங்கள் இருந்தன. செஸ் விளையாடுவதில் அவனை வீழ்த்த எங்கள் அக்ரஹார ஜாம்பவான்கள் எவராலும் முடியாது.
தப்பில்லாமல் அக்ஷர சுத்தமாக ஆங்கிலம் பேசுவான்.பழைய சந்திரபாபு பாடல்களை, அவரை போலவே பிசிறாமல் உரக்க பாடுவான்.