சிறுகதை - வாஸந்தி - அனுசுயா
கட்டுப்படுத்த முடியாத, கட்டுப்படுத்தவும் தோன்றாத கண்ணீர் வழிகிறது .
கண்ணீரை துடைத்துக் கொள்ள வேண்டியதுதானே என சொல்லாமல் கீழிருக்கும் பிளாஷ் பேக்கு தாவுங்களேன் ப்ளீஸ் .
சில நொடிகளுக்கு முன் மெத்தையில் வீசிய போனை தொட்டேன் . வாஸந்தியுடன் போட்ட சண்டையின் சூடு - தகித்தது
சண்டை என்றதும் மூன்றாம் உலகப்போரா என யோசிக்கவேண்டாம். இந்திய தொலைக்காட்சிகளில் இத்துணையாவது தடவையாக என எவரும் உத்திரவாதம் கொடுக்க முடியாதபடி, எத்தனையாவ து தடவையாகவோ திரையிடப்படும் " தில்லானா மோகனாம்பாள்" படத்தை போலத்தான் "போடி " என சொல்லி நான் போனை வைப்பதும். அவளுடனான என் ஸ்நேகத்தில் முணுக்கென்றால் முறுக்கி கொள்ளும் ரகம் நான்.
வாஸந்தி!
அவளை நினைக்கும் பொழுதில் பொறாமையும், ஆச்சர்யமும் , ஏக்கமும் , ஏகமாக உதிப்பதை தடுக்க முடிவதில்லை. தென்காசியில் தொடங்கி இன்றுவரை என் வாழ்க்கையில் பயணிப்பவள். ஒரே ஊர் , ஒரே தெரு, ஒரே வயது, ஊரிலும் பக்கத்து வீடு .
தென்காசியில் பிறந்து, தென்காசியிலேயே வளர்ந்து, தெ.விலேயே வாழ்க்கைப்பட்டு , தெற்கில் தெ ஐயும், வடக்கே வாசுதேவநல்லூரையும் தாண்டாதவள்.
அல்பமாக எண்ணி நாம் ஒதுக்கும் அல்லது கவனிக்கக்கூட தவறும் நித்யபடி வாழ்க்கையின் நிகழ்வுகளை ஆச்சர்யத்துடனும், அவலங்கள் என நாம் முத்திரை குத்தும் விஷயங்களை சிறு அங்கலாய்ப்புகள் கூட இல்லாமலும் கடந்து செல்லும் மனநிலை வாய்க்க பெற்றவள்.
கத்தாரில் எண்ணெய் கிணற்றில் நீந்தும் கணவன், 9 வயதில் ஒரு மகன், படுக்கையிலேயே சர்வமுமாக இருக்கும் 80 எட்டும் மாமனார் என அளந்தெடுத்து செய்தது போன்ற ஒரு குடும்பம்.
ஏஏஏஏஏஏஏஏஏட்டி. - காலைல சாப்டியா? என்னத்த சாப்பிட்ட ? என கேட்கும் மாத்திரத்தில், என் வாழ்க்கையோட்டத்திற்கு தற்காலிக தடுப்பணை கட்டி, 90 களின் தென்காசி ரத வீதிக்கு என்னை கடத்திக்கொண்டு போகும் சாமர்தியமுள்ள தந்திரக்காரி அவள் மட்டுமே .
இவன் கேட்டான்னு பாஸ்தாவா ! அது பண்ணினேண்டி . பாக்கவே நல்லாயில்லை . புளிச்ச மோரில் முக்கின அப்பள மாவு மாதிரி பிசுபிசுன்னு கோந்தாட்டம் இருந்துச்சு என்று முதல் முறையாக ready made பாஸ்தா செய்ததை அவள் சொல்லும்பொழுது, அதே பாஸ்தாவை பலநூறு தடவை சாப்பிட்டிருந்தாலும் , முதல் முறையாக அதை பார்க்கும் சிறுமியின் மனநிலையை எனக்கு ஏற்படுத்தியவள்.
காலை 8 முதல் 9 வரை மாமனாருக்கு சிஷ்ருஷை செய்ததில் தொடங்கி , இதோ , சில நாட்களுக்கு முன்பு முதல் முறையாக smart phone உபயோகப் படுத்தியதை பற்றி, ராத்திரி சுட்ட தோசை சூப்பராக சுருண்டு வந்ததை பற்றி என அனுதின வாழ்வின் அத்தனை கணங்களையும் அவள் அணுகுவதும் , கடந்து செல்வதும் அழகானதாக , நம்மையும் அட சொல்ல வைப்பதாக இருக்கும்.
விவாஹம் கழிந்து , விவாகரத்தும் கழிந்த என்னிடம் { காரணத்தை உங்களிடம் சொல்ல தோன்றவில்லை .. அது இந்த கதைக்கும் தேவையில்லை – So, pls chuck it} மற்றுமொரு கல்யாண பேச்சை அப்பா அம்மா எடுத்தபொழுது, நான் போட்ட சண்டையால் கோவித்துக்கொண்டு தென்காசிக்கு பஸ் ஏறி போனவர்கள் , விபத்தில் ஒரேயடியாக போய் விட்டார்கள் !
ஆமாம் .நான் தனி கட்டை ! அப்படிதான் நான் வேலை செய்த - செய்யும் அலுவலகங்களில் இருந்த சில ஆண்கள் { நானில்லாத சமயங்களில் } விளிப்பார்கள் என்று நானறிவேன் .
அலுவலக அபத்தங்களுக்காக , உத்தியோக நிமித்த உபத்திரவங்களுக்காக பலவித முகமூடிகளை போட்டு பழகி , பாழாகி, பழசாகி இருக்கும் நான், ஒரு நொடி கூட நடிக்காமல் , நான் – நானாகவே இருப்பது அவளுடன் பேசும் தருணங்களில் மட்டும் தான்.
என் கோபங்கள், குமுறல்கள், நிராசைகள், மகிழ்ச்சி , வெற்றிகள், தோல்விகள் , என எல்லாவித உணர்வுகளையும் உள்ளபடியே , உள்வாங்கி உணர்ந்து கொண்ட ஒரு ஜீவன் .
கர்நாடக கார்ப்பரேஷன் எலக்ஷன் முதல், என் கார்ப்பரேட் வாழ்க்கையின் பிரச்சினைகள் வரை நான் சொல்லும் எல்லாவற்றையும் குறுக்கிடாமல் கேட்டபடியே "உம்" சொல்லுடி என அவள் சொல்லும் "உம்" எனக்கு வேண்டும் . அப்படிப்பட்டவளுடன் தான் சண்டை .
ஊரிலுள்ள பெண்கள் மாதாந்திர சீட்டு கட்ட தொடங்கியவுடன் தன் சகிகளையும் சுற்றத்தாரையும் மூளை சலவை செய்து, அவர்களையும் சீட்டு போட வைத்துவிடும் தந்திரத்தை போன்ற மற்றுமொரு தரித்திரம் - மன்னிக்கவும் தந்திரம் தான் - யார் , என்ன , எங்கே , ஏன் , எதற்கு , எப்படி என்றே தெரியாமல் எதாவது ஒரு “வாட்ஸ் அப் “ குரூப்பில் நாம் சேர்க்கப்படுவதும்.