" மாது! சுசீ! ரெண்டுபேரும் கவனமா கேளுங்கோ! போன வாரம், என் தம்பியும் அவன் பெண்டாட்டியும் என்னைப் பார்க்க வந்திருந்தபோதே, நான் அவர்களிடம் பேசி ஏற்பாடு பண்ணியாச்சு! என் செல்லப் பேத்தி தலைப் பிரசவத்துக்கு நீங்க ரெண்டு பேரும் கட்டாயம் அமெரிக்கா போறீங்க! இது என் உத்தரவு! எந்தப் பெண்ணுக்கும் பிரசவம்னா, மறுபிறவிதான்! அதுவும், தலை பிரசவம்னா, ரொம்ப சிக்கலானது. தவிர, கர்ப்பிணி தன் தாய் பிரசவத்தின்போது தன்கூடவே இருக்கவேண்டும் என ஏங்குவது இயல்பு!
நீங்க இங்கேயில்லாத ஆறு மாதம், என்னை கவனிச்சிக்க, என் தம்பியும் அவன் பெண்டாட்டியும் என்னோட இங்க இருப்பாங்க!
முக்கியமா, மாது! உங்கப்பா ஒரு ஜோசியர்னு உனக்குத்தான் தெரியுமே, அவர் எனக்கு மாரகதசை எப்போ வரப்போகுது, எப்போ நான் கண்ணை மூடப்போறேன்னு தேதி குறித்து சொல்லியிருக்கார். அந்த தேதி வர, இன்னும் ஒரு வருஷம் இருக்கு! அதனாலே, நீங்க ரெண்டுபேரும் அமெரிக்கா போய் ஆறுமாசம் இருந்துவிட்டு திரும்பிவரும்போது, என் கொள்ளுப் பேரனையோ, கொள்ளுப் பேத்தியையோ என் செல்லப் பேத்தியோட அழைச்சிண்டு வாங்க! நான் குழந்தையை பார்க்கவேண்டாமா?"
பிரச்னை இப்படித்தான் தீர்ந்து இப்போது நாங்கள் லண்டனில், பிருத்வீயுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்!
" சார்! நான் வயதிலே உங்க ரெண்டு பேரைவிட ரொம்ப சின்னவன்! உங்களுக்கு புத்திமதி சொல்கிற தகுதியோ, அனுபவமோ, எனக்கு கிடையாது! ஆனா, என் தாத்தா கடைசி காலத்திலே, என்னிடம் சொன்னதை சுருக்கமா சொல்றேன்: 'அரைகுறையா வேதாந்தம் படித்தவன்தான் குழப்பத்திலே தன் வாழ்க்கையை பாழாக்கிப்பான்.
நல்லா தெரிந்தவன், முதல்லே 'தான்' என்பதையே மறந்துடுவான், ஒவ்வொரு வினாடியும் நம்மை மேலேயிருந்து ஆட்டுவிக்கிறவன், தன் காரியத்தை சரியாகச் செய்வான். நம்மை அவனிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டு, காற்றில் திக்கு திசை தெரியாமல் பறக்கிற காய்ந்த சருகுபோல, மகிழ்ச்சியுடன் வாழணும்! வேறெந்த சிந்தனைக்கும் இடங்கொடுத்தால், நம்மை நமது ஈகோ கவிழ்த்துவிடும்!'னு எங்க தாத்தா குடும்பத்திலே எல்லோருக்கும் சொல்லிட்டுப் போனார்."
" பிருத்வீ! கடவுள் எங்களுக்கு சரியான நேரத்திலே நல்ல வழி காட்டத்தான், உன்னை அனுப்பியிருக்கிறார். நாங்கள் உனக்கு, நியூயார்க் விமானம் ஏறுகிற வழிதான் சொல்லித்தரமுடியும். நீயோ, எங்களுக்கு, மிச்சமிருக்கிற எங்கள் வாழ்நாட்களில் எப்படி குழப்பமில்லாமல் நிம்மதியாக வாழலாம் என்கிற வழியை காட்டிவிட்டாய்! ரொம்ப தேங்ஸ்!"