சமையற்காரம்மா, குழந்தையை தூக்கியதும், அதன் கண்களில் ஒளி சுடர் விட்டது! இதை மூவருமே கவனித்து அதிசயித்தனர்.
நெடுநேரம் சிந்தித்தும், மூவருக்குமே இந்தப் பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை!
இறுதியில், கற்பகம் உறுதியாக முடிவெடுத்து, கணவனின் காதுகளில் அந்த தீர்வை ரகசியமாக தெரிவித்து, உடனே கிளம்பச் சொன்னாள்.
சிவமும் வேறு வழி தெரியாமல், ஒப்புக்கொண்டான்.
கற்பகம் குழந்தையை தூக்கிக்கொண்டு கணவனுடன் கிளம்பி, வாடகைத்தாயின் இருப்பிடத்தை தேடிக் கண்டுபிடித்து அடைந்தாள்.
அந்தக் குடிலின் நுழைவாயிலில் குனிந்து நுழையும்போதே, முனகல் சத்தம் கேட்டது!
ஆம், ஒரு பெண் தன் மார்பில் கைகளை அழுத்திக்கொண்டு வலி தாங்காமல் முனகிக்கொண்டிருந்தாள்.
அவள் கண்கள் கடும் காய்ச்சலின் விளைவாக மூடியிருந்தன.
சத்தம் கேட்டு "யாரது?" என்று முனகினாள்.
கற்பகத்துக்கு புரிந்துவிட்டது, அவள் மார்பில் தாய்ப்பால் கட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் அவளை பாடாய் படுத்தியது!
முதல் காரியமாக, அவளை எழுப்பி குழந்தையை காட்டியதும், அதை அவள் தாவி எடுத்து அணைத்து தன் மார்பகத்தில் புதைத்துக்கொண்டாள்.
குழந்தை தாய்ப்பால் குடிக்க, குடிக்க, இறுகியிருந்த அவள் மார்பு தளர்ந்து அவளுக்கு வலியிலிருந்து பெரும் விடுதலை தந்தது!
அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது!
கற்பகம், சிவம் கண்களிலிருந்தும்தான்!
நால்வரில், கண்களில் புத்தொளியுடன் சுடர்விட்ட ஒரே ஜீவன் அந்த பச்சைக் குழந்தைதான்!
" பார்த்தியா, சிவம்! இத்தனை நாட்களாக, இந்தக் குழந்தையை தாயிடமிருந்து பிரித்துவைத்து, தாய், சேய் இருவரையும் கொடுமைப்படுத்தியதை தண்டிக்கத்தான், இறைவன் இந்த நாடகத்தை ஆடியிருக்கிறான், இப்போது பார்! குழந்தை பால் குடித்து முடிந்ததும், நான் அதை உற்று பார்க்கிறேன், அது சிரிக்கும் பார்!" என்று கற்பகம் ஓவென அழுதுகொண்டே கூறினாள்.
சிவம் கற்பகத்தின் எதிர்பார்ப்பு நடக்கவேண்டுமே என கடவுளை பிரார்த்தித்தான்.
அவன் தூய்மையான பிரார்த்தனையும் கற்பகத்தின் ஆழ்ந்த நம்பிக்கையும் இறைவன் அருளால் வீண் போகவில்லை!