குழந்தையை பார்க்கலாமாம்.......வா, போகலாம்!"
கணவனுக்குத் தெரியாமல், கற்பகம், நர்ஸ் லாவண்யாவிடம் ரகசியமாக " பெற்றவள் எந்தக் காரணத்தைக் கொண்டும், குழந்தையை பார்க்கக்கூடாது, தாய்ப்பால் தரக்கூடாது, உஷார்!" என எச்சரித்தாள்.
காலம் அதன் வேகத்தில் ஓடி, கற்பகம்-சிவம் தம்பதியின் வீட்டில், குழந்தையை கொண்டுசேர்த்தது!
கற்பகம் சமையலுக்கு ஆள் போட்டுவிட்டு, எந்நேரமும், குழந்தையின் அருகிலேயே இருந்தாள். அதனுடன் பேச்சுக் கொடுத்து பார்த்தாள். கைகளை தட்டி குழந்தைக்கு காது கேட்கிறதா என சோதித்தாள். ஆனால், எதற்கும் அந்தக் குழந்தை கண் சிமிட்டவோ, அசையவோ, சிரிக்கவோ, அழவோ எதுவும் செய்யாமல் உம்முனு இருந்தது!
கற்பகம் சமையற்காரியை அழைத்துக் காட்டி, " ஏன் குழந்தை அசைவே இல்லாமலிருக்கு?" எனக் கேட்டாள்.
" அம்மா! இது பச்சைக் குழந்தைம்மா! வெளிச்சத்துக்கு, அது பழக்கப்படவே நாளாகும், அதன்பிறகுதான் அசைவு காட்டறது, சிரிக்கிறது எல்லாம். மனசை வீணா அலட்டிக்காம குழந்தையை கொஞ்சுங்க!"
கற்பகத்தின் மனம் அடைந்த சமாதானம், சில மணி நேரம்கூட நீடிக்கவில்லை. அன்று மாலையே, சிவம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி, குழந்தையை அருகில் நின்று கொஞ்சியபோது, தவிடுபொடி ஆயிற்று!
அவனைக் கண்டதும், அந்த பச்சைக் குழந்தை, அவனிடம் பல நாட்கள் பழகியதுபோல, கண்கள் மலர்ந்து, இதழ் பிரித்து, சிரித்ததோடு, கைகால்களை ஆட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தியது!
அதைப்பார்த்த சிவம், குழந்தையை அள்ளி அணைத்து, முத்தமிட்டு, தன்னை மறந்த நிலையில் கண்ணீர் உகுத்தான்!
பத்து ஆண்டுகளுக்கு மேலாக, இதற்குத்தானே அவன் தவம் கிடந்தான்!
அந்த சுகம், இன்று, அவனுக்கு வாடகைத்தாயின் மூலம் கிடைத்திருக்கிறது!
அவன் இன்பத்தின் உச்சாணிக் கிளையில் ஊஞ்சலாடியதால், அருகிலிருந்த மனைவி கற்பகம் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததை அறிய சில வினாடிகள் ஆயிற்று!
" கற்பகம்! கற்பகம்!"
அவள் முகத்தில் நீர் தெளித்து மயக்கம் தெளிவித்தான். அவள் மெல்ல கண்களை திறந்து பார்த்தாள்.