சிறுகதை - அச்சம் தவிர்! - ரவை

" அப்பா! இன்று நான் அடெண்ட் பண்ணப்போற இன்டர்வியூ, ரொம்ப முக்கியமானது, நல்ல சம்பளம், கௌரவமான பதவி....இதிலே நான் எப்படி நடந்துக்கணும்னு டிப்ஸ் கொடேன்!"
" முதல்லே, இந்த வேலை கிடைக்கலைன்னா, உனக்கு மிகப் பெரிய நஷ்டம் என்றோ, தோல்வி என்றோ நினைக்காதே!......."
"அம்மா! இங்கே பாரும்மா, அப்பாவை! இன்டர்வியூவிலே நான் நன்னா பண்ணினாத்தானே, எனக்கு அந்த நல்ல, பெரிய உத்தியோகம் கிடைக்கும். அதை விட்டுட்டு, எனக்கு கிடைக்கலேன்னா ஒண்ணும் குடி முழுகிப் போயிடலேங்கறாரும்மா!"
" ஏங்க, இப்படி அபசகுனமா சொல்றீங்க? தைரியமா கேள்விகளுக்கு பதில் சொல்லு, நல்லா தயார் செய்துக்கோன்னு, நல்ல வார்த்தை சொல்லுங்க!"
" நீ சொல்றதைத் தான், நான் வேற விதமா சொல்றேன், டென்ஷன் இல்லாம இருந்தால்தானே, எதுவும் மறக்காமலிருக்கும். பயத்திலே பதில் சொன்னால், பதிலிலே தெளிவிருக்காது, புரியுதா?"
" மோகன்! அப்பா சொல்றதும் கரெக்ட்டுடா! ஜாலியா போய், ஃபிரீயா பதில் சொல்லு! தவிர, இது கிடைக்கலேன்னா, கடவுள் உனக்கு இதைவிட நல்ல உத்தியோகம் ஏற்பாடு செய்திருக்கிறார்னு அர்த்தம்! இல்லீங்க?"
" ஆமாம், சுமதி! நாம் சொல்றபடி மோகன் இன்று செய்யட்டும், அவனுக்கு வெற்றி கிடைக்குதோ இல்லையோ, எந்தவிதமான ரிசல்ட் வந்தாலும் அதை சுலபமா ஏற்றுக்கிற மனப்பக்குவம் அவனுக்கு வரும். மோகன்! ஆல் தி பெஸ்ட்!"
மோகன் கோட்டு சூட்டு டை கட்டிண்டு, "பை" சொல்லிவிட்டு கிளம்பினான்.
" ஏங்க! மோகன் எதிர்பார்த்தபடி, நாலு வார்த்தை வாழ்த்தி அனுப்பாம, இப்படி பேசி அனுப்பினீங்க?"
" சுமதி! மோகன் ஒரு தொட்டாற் சுருங்கி! ஏமாற்றத்தை ஏற்றுக்கிற துணிவு கிடையாது. அந்த உத்தியோகமோ, பெரிய பதவி, அதற்கேற்ற சம்பளம்! நிறைய பேர் இன்டர்வியூவிலே கலந்துப்பாங்க, சில பேர் பெரிய இடத்து சிபாரிசுடன் வருவாங்க, ஏன், மந்திரிங்க சிபாரிசுகூட வரும், அதை விடு, இவனைவிட அதிகம் படித்து பட்டம் பெற்றவங்க வரலாம், முன் அனுபவம் உள்ளவங்க வரலாம், அதனாலே, மோகனுக்கு யதார்த்த நிலையை மறைமுகமா சுட்டிக் காட்டினேன்...."
சுமதி, கணவனின் அருகில் நெருங்கி நின்று, " மோகன் வயசிலே உங்களுக்கு இந்தப் பக்குவம் இல்லாத காரணத்தாலே தான், அந்த தப்பை செய்ய இருந்தீங்களா?"எனக் கேட்டாள்.