சிறுகதை - அவனே என் உயிர்! - ரவை
பிருந்தாவின் முகத்திலே ஒரு கலவரம் தெரிந்தது!
இந்த விசேஷ கேளிக்கையும் விருந்தும், அவளுக்காக, அவள் சாதனையை கொண்டாடுவதற்காக, அவளை மேலும் உற்சாகப்படுத்துவதற்காக, ஏற்பாடான ஒன்று!
அவள் சாதனை, சாதாரணமானதா? அகில இந்தியாவிலும், தேர்வில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான பேர்களிலும், பிருந்தா, முதல் முயற்சியிலேயே, மற்றவர்கள் யாவரையும்விட அதிக மதிப்பெண் பெற்று, முதலாவதாக தேர்வாகியிருக்கிறாள்.
அதிலும், கிராமத்திலே பிறந்து, சாதாரண முனிசிபல் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து, பின் சென்னையில் கல்லூரியில் ஆங்கில மீடியத்தில் படித்து,எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கடந்து, பட்டம் பெற்று, அகில இந்திய ஐ.ஏ.எஸ். தேர்வில் முதல் ரேங்க் பெறுவதென்பதென்பது சாதாரண காரியமா?
பிருந்தாவின் குடும்பமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பூரிப்புடன் மகிழ்ந்தது!
பிருந்தா அந்தக் குடும்பத்தில் பிறந்த ஒரே பெண் குழந்தை! கடைக்குட்டி வேறு! மற்ற நால்வரும் ஆண்கள்! கேட்கவேண்டுமா? அப்பா, அம்மா, அண்ணன்கள் யாவருக்கும் அவள்மீது மிகுந்த பிரியம்! அவள் எது கேட்டாலும், இல்லை, இல்லை, கேட்கும் வரை காத்திருக்க மாட்டார்கள், அவள் நினைக்கிறாள் எனத் தெரிந்ததுமே, முதல் காரியமாக ஓடிப்போய் அந்தப் பொருளை பெற்று அதை பிருந்தாவிடம் சேர்க்கும்வரை, ஓயமாட்டார்கள்.
அவள்மீது அத்தனை பாசமுள்ளவர்கள் அனைவரும் சுற்றி இருக்கையில், பிருந்தாவின் முகத்தில் ஏன் இந்தக் கலவரம்?
அவர்கள் அனைவரும் வீட்டில் அவனை தன்னந்தனியாக விட்டு வந்ததுதான், அவள் கலவரத்துக்கு காரணம்!
அவனால் தனியாக இருக்கமுடியாதே! அவன் தவித்துப்போவானே! தேடுவானே, அவர்களை! குறிப்பாக பிருந்தாவை!
அவன் அன்பின் களஞ்சியம்! பிருந்தாவின் ஆருயிர்! அவனுக்கு பிருந்தாவின் தினசரி வழக்கமான அலுவல்கள் குறித்த நேரத்துடன் தெரியும். அதனால், பிருந்தா காலேஜ் செல்லும்போதோ, வேறு வேலைக்காக செல்லும்போதோ அவனுக்குத் தெரியும். அவளை வாசல்வரை வந்து வழியனுப்புவான்.
அவள் வீட்டில் இல்லாதபோது, மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுவான். அவள் திரும்பி வந்ததும், அவளைவிட்டு நகரமாட்டான். அவள் மடியில் கிடப்பான், காலடியில் இருப்பான், வீட்டிற்குள் அவள் செல்லுமிடமெல்லாம் கூடவே செல்வான்.