பிருந்தாவினாலும் வீட்டில் இருக்கும்போது, அவன் இல்லாமல் இருக்கமுடியாது. சொன்னால் நம்பமாட்டீர்கள், அவனைக் கட்டிக்கொண்டுதான் தினமும் அவள் படுக்கையில் நிம்மதியாகத் தூங்குவாள், அவனும்தான்.
அவனுக்காக, அவள் குளிர்காலமாக இருந்தாலும், தூங்கும்போது, போர்வையை உபயோகிக்கமாட்டாள், ஏனெனில் அவனுக்கு மூச்சு திணறும்!
அவனுக்கு உணவு கொடுத்தபின்புதான், அவள் சாப்பிடுவாள். ஒரு அதிசயம் தெரியுமோ? பிருந்தாவின் வீட்டில் யாவரும் சுத்த சைவம் என்பதால், அவனும் சுத்த சைவம்!
ஆம், அவன் சமைத்த அரிசி, கறிகாய், பழங்கள், தானியங்கள் சாப்பிடுவான். வெங்காயம், பூண்டு இரண்டும் அவனுக்கு அலர்ஜி!
தாகம் தீர, தண்ணீர் குடிப்பான். எல்லாமே அளவோடுதான்! அந்த அளவு தாண்டியதும், பிருந்தாவே கெஞ்சினால்கூட, சாப்பிடமாட்டான்.
காலையில் பிருந்தா அவனை வெளியில் அழைத்துச் செல்வாள். அவள்கூடவே ஒட்டிக்கொண்டு வாலை ஆட்டிக்கொண்டு வருவான். அவன் இனத்தைச் சேர்ந்த மற்றவர்களை பார்த்து பயந்து பிருந்தாவை துணைக்கு அழைப்பான், அவளும் அவனை தூக்கிக்கொள்வாள். முத்தம் இடுவாள்.
அவனுக்கு அது முத்தம் என்று தெரியாவிட்டாலும், அவன்மீது காட்டப்படும் அன்பு என்று புரியும். இரு காதுகளுக்கு பின்புறத்திலும் தடவிக்கொடுப்பதை மிகவும் விரும்புவான்.
(அவன், அவன் என்றே ஏன் குறிப்பிடுகிறேன் எனக் கேட்கிறீர்களா? 'நாய்' என்று அவனை சொன்னால், பிருந்தா, என் கன்னத்தில் பளார் என அறைந்துவிடுவாள்)
பிருந்தாவின் கலவரத்துக்கு காரணம், அவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு மற்றவர்கள் அனைவரும் இங்கு வந்துவிட்டார்களே, இங்கே மணிக்கணக்கில் இருப்பார்களே, அவன் தனிமையில் இருக்கப் பயப்படுவானே, அவனுக்கு இருதய நோய் வருமே! அவன் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்பதுதான்!
கடந்த ஒரு வாரமாகவே, பிருந்தாவினால் அவனை சரிவர கவனித்துக்கொள்ள முடியவில்லை. அவள் தேர்வில் முதலாவதாக வந்துள்ள செய்தி வந்ததிலிருந்து, அவளுக்கு போன்கால், வாட்ஸ்அப் மெசேஜ், ஈமெயில், பத்திரிகை, வார இதழ் நிருபர்கள் பேட்டி, தொலைக்காட்சி, ரேடியோ நிருபர்கள் பேட்டி, மத்திய மாநில அரசு செயலாளர்களின் பாராட்டு மடலும், அமைச்சர்களின்வாழ்த்துக்களும், வந்தவண்ணம் இருந்ததால், அவளால் அவனை கவனிக்க முடியவில்லை!