சிறுகதை - ஏதோ ஒரு தவறு! - ரவை
பிரேமா, தன் பெண் குழந்தையை மடியில் போட்டு, தூங்கவைத்துக்கொண்டே, சிந்தனையில் ஆழ்ந்தாள்.
அவள் தந்தை வழக்கம்போல, பூஜையறையில், பக்திசிரத்தையாக அமர்ந்து அஷ்டோத்தரம் சொல்லி பூஜை செய்துகொண்டிருந்தார்.
அவள் அண்ணன் கார்த்திகேயன் ஆபீஸ் கிளம்பிக்கொண்டிருந்தான்.
சமையலறையிலிருந்து கையில் ஒரு டப்பாவில் சாப்பாடு நிரப்பி, அதை ஒரு பையில் போட்டு, அண்ணனிடம் நீட்டினாள், சமையற்காரி சண்பகம்மா!
" நான்தான் கேன்டீனிலே சாப்பிட்டுக்கிறேன், நீங்க எனக்காக கஷ்டப்படவேண்டாம்னு நூறுமுறை சொன்னேனே, ஏன் கேட்காம, திருப்பித் திருப்பி, தினமும் சாப்பாடு கொடுக்கறீங்க? உங்களை இப்படி வேலை வாங்கறது, மகா பாபம்! அந்த பாபம் எனக்கு வந்துசேரணுமா, மாமி?"
" சிவசிவா! ஒருநாளும் உனக்கு அந்த நிலமை வராது, உன் நல்ல குணத்துக்கு! எனக்கொண்ணும் கஷ்டமாகவே இல்லே, ஒரு அரை மணி சீக்கிரம் எழுந்திருக்கிறேன், உனக்காக இல்லே, எனக்கு விழிப்பு வந்துவிடுகிறது, நீ ஸ்கூட்டரிலே ஜாக்கிரதையா ஆபீஸ் போயிட்டு சாயங்காலம் நேரத்தோட வீடு திரும்பிடு, உனக்கு பிடித்த ரவா தோசை செய்து வைக்கிறேன்......."
கார்த்திகேயன் சண்பகம்மாவின் காலைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான்.
அவளோ, அதிர்ச்சியில், பின்வாங்கினாள்!
" மாமி! எங்கம்மா சாகும்போது, உங்களை எங்கிருந்தோ அழைத்துவந்து, எங்க குடும்பத்திலே ஒருத்தியா உங்களை சேர்த்தபோது, ஏன் அப்படி செய்தாள்னு அப்போ புரியலே, இப்பத்தான் புரியுது! .....மாமி! எனக்கு உங்களை 'மாமி'ன்னு கூப்பிடறதுக்குப் பதிலே, 'அம்மா'ன்னு கூப்பிட ஆசையாயிருக்கு, இனிமே அப்படித்தான் கூப்பிடப்போறேன்....."
பூஜை செய்துகொண்டிருந்த அவன் தந்தை சதாசிவம் அஷ்டோத்தரத்தை பாதியில் நிறுத்திவிட்டு, அவனை திரும்பிப் பார்த்தார். அதை கார்த்திகேயன் கவனிக்கவில்லை, பிரேமா கவனித்துவிட்டாள்.
சண்பகம்மா கண்களை துடைத்துக்கொண்டு சமையலறைக்குள் புகுந்துகொண்டாள்.
அவள் யாருடனும் அதிகம் பேசமாட்டாள். சமையலறையை விட்டு வெளியே எப்போதாவதுதான் வருவாள்! பிரேமா, கார்த்திகேயன், அவன் தம்பி கண்ணன் மூவரிடமும் பாசத்தோடு பழகுவாள்.