குடும்பத்தலைவர் சதாசிவம் இருக்கிற இடத்தில், அவள் நிழல்கூட படாது!
அவரும் எதற்கும் அவள் உதவியை எதிர்பார்க்காமல் தானே டைனிங் டேபிள் மீது வைத்திருக்கும் சாப்பாட்டை தட்டில் எடுத்துப் போட்டுக்கொண்டு, குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுவிட்டு தன் அறைக்குள் புகுந்துகொண்டு பகவத் கீதை புத்தகத்தை திருப்பித் திருப்பி படித்துக்கொண்டிருப்பார்!
பிரேமா, உறங்கிவிட்ட குழந்தையை, மடியிலிருந்து எடுத்து தோளில் சாய்த்துக்கொண்டு போய், படுக்கையில் மெதுவாக போட்டு மின்விசிறியை இயக்கிவிட்டு தம்பி கண்ணனின் அறைக்குள் நுழைந்தாள்.
அவன் மேஜையின்மீது தலை சாய்த்து கண்களை மூடியிருந்தான்.
"கண்ணா! தூங்கிறயா?"
கண்ணன் கண்களை திறந்து தலைதூக்கி பிரேமாவைப் பார்த்தான். கன்னங்களில் கண்ணீர் கறை!
" அழுதியா?"
ஆமென தலையசைத்து பிரேமாவைக் கட்டிக்கொண்டு, அவள் கண்களை நேருக்கு நேர் சந்தித்து "அக்கா! அம்மா ஞாபகம் வந்துவிட்டதக்கா!" என்று புலம்பினான்.
பிரேமாவினால் அவனை புரிந்துகொள்ள முடிந்தது. கண்ணனுக்கு பதினைந்து வயது! கடைக்குட்டி என்பதால் அம்மா செல்லம்! இவனும் கைக்குழந்தை போல, அம்மாவைப் பிரியாமல் ஒட்டிக்கொண்டு நிற்பான்!
அவனைவிட தான் பத்து வயது கூடவிருந்தும், தன்னாலேயே தாயின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாதபோது, பாவம்! கண்ணனால் எப்படி முடியும்? என பிரேமா அனுதாப்ப்பட்டாள்.
" கண்ணா! எல்லாம் நம்ம தலையெழுத்துடா! ஊரிலே, உலகத்திலே யாருக்குமே வராத வியாதி திடீர்னு அம்மாவை தாக்குவானேன், டாக்டர்கள் என்ன வியாதின்னு கண்டுபிடிக்கும் முன்பே, கடவுள் அவசரப்பட்டு அம்மாவை அழைத்துக்கொள்வானேன்?"
" அக்கா! அது மட்டுமில்லேக்கா! உனக்கு கல்யாணமாகி குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்குள், மாப்பிள்ளை விபத்தில் நம்மை விட்டு போவானேன்? அக்கா! நீ ஒன்று கவனிச்சியா? அம்மா போனபிறகு, அப்பா தன் பேச்சை வெகுவாக குறைத்துக்கொண்டு, எப்போது பார்த்தாலும் வேதாந்த புத்தகமும் கையுமாக இருப்பதை கவனிச்சியா?"
" இந்தக் குடும்பமே ஆடிப்போயிருக்குடா, இந்த இரண்டு பேருடைய திடீர் மரணத்தினாலே!