" ஆமாம், அவருடையதுதான்!"
திரும்பவும் ஜாதகத்தை உற்றுப் பார்த்தார்.
" நீ சொன்னாயே, உங்கம்மா இறந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லைன்னு, அது சரிதானே?"
" சரிதான், ஏன் சந்தேகப்படறீங்க?"
" உங்கம்மா, அப்பாவுக்கு முதல் மனைவிதானே?"
" ஆமாம், எங்கப்பாவுக்கு ஒரே ஒரு மனைவிதான், அது எங்கம்மாதான்!"
" உங்கப்பாவுக்கு அறுபது வயதாகிவிட்டதே, இன்னொரு கல்யாணம் செய்துகொள்வாரா, என்ன?"
" எனக்கு நீங்க கேட்பது, புரியவேயில்லை! விவரமா உங்க சந்தேகத்தை சொல்லுங்க!"
" இல்லே....இந்த ஜாதகப்படி அவருக்கு இரண்டு தாரம்னு சொல்லுதே, அதுதான் எனக்குப் புரியலே........."
" எங்கப்பாவுக்கு ஒரே ஒரு மனைவிதான், அது எங்கம்மாதான்!"
" சரி, அதை விடு, உங்கப்பாதான் உங்க குடும்பத்தின் விதியை உருவாக்குபவர்! அவர் ஜாதகத்திலே தோஷம் இருக்கு, அந்த தோஷம் என்னன்னு தெரிந்தால்தான், பரிகாரம் சொல்லமுடியும், ........உம், நீ ஒரு காரியம் செய்! உங்கப்பாவுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா இருப்பாங்களே, அவங்களிலே ஒருவரை என்னை வந்து பார்க்கச் சொல்லு! அவங்க வரமுடியலேன்னா, நீயே அவங்களை 'உங்கம்மா, அப்பாவின் ஒரே மனைவியா, அல்லது இரண்டாவது மனைவியா.......உங்கப்பாவுக்கு வேறு மனைவி உண்டான்னு தெரிந்துகொண்டு வா! எனக்கென்னவோ, சந்தேகமாயிருக்கு, அதனால்தான்.......அது தெரிந்தவுடனே, பரிகாரம் சொல்றேன், கவலைப்படாதே! எல்லாம் சரியாகிவிடும்..........."
பிரேமாவுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி! இதென்ன புதுக் குழப்பம்?
கண்ணனுடன் வீடு திரும்பினாள். மாம்பலம் மகாதேவன் சொன்னதை குடும்பத்தில் யாரிடம் சொல்வது, அண்ணனிடமா? அல்லது அப்பாவிடமே கேட்போமா? என்று குழப்பம்!
ஒன்று நிச்சயம், தம்பி கண்ணனுக்கு இது தெரியக்கூடாது!
பலத்த யோசனைக்குப் பிறகு, முதலில் அண்ணனிடம் பேசிப் பார்ப்போம், பிறகு அவன் சம்மதித்தால் அப்பாவிடம் கேட்போம் என முடிவு செய்தாள்.
அதிலே ஒரு சிக்கல், அண்ணனுக்கு ஜாதகம், ஜோசியம் என்பதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது!