ஏன் நமக்கு மட்டும் இப்படி ஆயிற்று? எத்தனை யோசித்தாலும் தலை சுற்றுதே தவிர, புரியமாட்டேங்குதுடா!"
" அக்கா! என்னோட படிக்கிறவனின் அப்பா பிரபலமான ஜோதிடர், மாம்பலம் மகாதேவன்! தொலைக்காட்சியிலே தினமும் காலையிலே அரை மணி நேரம் ராசிபலன் சொல்றாரு! நம்ம குடும்பத்து ஜாதகப் புத்தகத்தையே அவரிடம் காட்டி, நம்ம குடும்பம் பழையபடி சந்தோஷமாக இருக்க பரிகாரம் இருக்கான்னு கேட்போமா?"
" அப்படியா! அண்ணனுக்கு இந்த ஜோசியம், ஜாதகம் இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. அப்பாவோ உலகமே வெறுத்துப்போய் பூஜையறையிலேயே முடங்கிக் கிடக்கறாரு, நாளைக்கு அண்ணன் ஆபீஸ் போனதும், குழந்தையை சண்பகம்மாவிடம் ஒப்படைச்சுட்டு, நாம ரெண்டுபேரும் அவரை பார்த்து வருவோம், நம்ம குடும்ப ஜாதகப் புத்தகத்தை அப்பாவுக்குத் தெரியாமல் பீரோவிலிருந்து எடுத்துக்கொள்வோம், சரியா?"
" அக்கா! அவருக்கு பணம் கொடுக்கணுமே........?"
" என்னிடம் பணம் இருக்கு, கவலைப்படாதே! உன் நண்பனிடம் இன்னிக்கே சொல்லிவை! நாளை காலை பத்துமணிக்கு வரோம்னு, அப்பா அந்த நேரத்திலேதான் பூஜையறையிலே இருப்பாரு! அரை மணி நேரத்திலே திரும்பிடுவோம், குழந்தை அழுவாளானோ........"
கண்ணன் உற்சாகமாக எழுந்து தன் நண்பனை சந்திக்க கிளம்பினான்.
பிரேமா கட்டிலில் படுத்திருந்த தன் குழந்தையின் அருகில் அமர்ந்து மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
பிரேமாவுக்கு கணவனை தேர்ந்தெடுத்ததே, அவள் அம்மாதான்!
அந்த அதிசய சம்பவத்தை நினைத்தவுடன், பிரேமாவுக்கு தன் கணவனின் குணங்களையும் சுபாவத்தையும் பற்றி நினைக்கத் தோன்றியது.
ராமசந்திரன் என்று அவனுக்கு பொருத்தமான பெயர்! பெற்றோருக்கு மரியாதை தருவதிலே, அவர்கள் சொல்படி நடப்பதிலே, தசரதராமனேதான்!
அவன் தாயும் பிரேமாவின் தாயும் பள்ளித் தோழிகள்! குடும்ப நட்பும்கூட!
இருவரும் கோவிலில் அடிக்கடி சந்திக்கும்போதெல்லாம், பிரேமாவின் தாய் தன் மகளுக்கு நல்ல வரனாக கிடைத்து விரைவில் திருமணமாக வேண்டுமே என புலம்புவதும், அதேபோல ராமசந்திரனின் தாய், தன் மகனுக்கு நல்ல குடும்பத்துப் பெண்ணாக கிடைக்கவேண்டுமே என்று புலம்புவதும் வாடிக்கை!
ஒருநாள் கோவில் சந்திப்பின்போது, தாயுடன் ராமசந்திரனும் வந்திருந்தான். அவனைப் பார்த்ததுமே, பிரேமாவின் தாய்க்கு தன் மாப்பிள்ளை இவன்தான் என தோன்றிவிட்டது.