கடவுளே அவனை அனுப்பியிருப்பதுபோல உணர்ந்தாள்.
தன் தோழியை தனியே அழைத்து தன் விருப்பத்தையும் தெரிவித்தாள். தோழிக்கும் பெரும் ஆனந்தம். அதிர்ஷ்டவசமாக ஜாதகப் பொருத்தமும் இருந்ததாக ஜோசியர் கூறியதும், மளமளவென செயற்பட்டு தடபுடலாக திருமணம் நிறைவேறி, பிரேமா ஒரு பெண் குழந்தைக்கு தாயாகவும் ஆனபோதுதான், ஒரு விபத்தில் ராமசந்திரன் உயிரிழந்தான்.
அவன் பிரேமாவுடன் வாழ்ந்த அந்த குறுகிய காலம், பிரேமாவின் வாழ்வில் பொற்காலம்!
தினமும் இருவரும் மாலையில் ஜாலியாக மரீனா பீச், பார்க், சினிமா என ஊர் சுற்றுவார்கள்.
வீட்டில் இருக்கும் நேரத்திலும் சமையலில் உதவுவான், காய்கறி நறுக்கிக் கொடுப்பான், வீட்டை சுத்தப்படுத்துவான், இருவரும் சேர்ந்தே சாப்பிடுவார்கள், டி.வி. பார்ப்பார்கள்,....அவளின் நிழலாக அவனும் அவனின் நிழலாக அவளும் இணைந்திருந்தனர். யார் கண் பட்டதோ!
காலையில் ஆபீஸ் கிளம்பிச் சென்றவன், போகிற வழியிலேயே ஒரு ராட்சச லாரி மோதி..........அந்தக் கோரக் காட்சியைப் பார்க்க, பிரேமாவை அனுமதிக்கவில்லை, பிறகு அந்த உடலை பக்குவமாக ஒருங்கிணைத்து பார்க்கும்படியாகச் செய்தபிறகே, அவள் பார்த்தாள். அப்போது அவள் கர்ப்பிணி!
அந்த அதிர்ச்சியினாலோ, என்னவோ, பிரேமாவின் தாய், பெயர் தெரியாத நோயில் விழுந்து, அவளும் தன் மாப்பிள்ளை சென்றவழியே பின்தொடர்ந்தாள்.
வீட்டில் அதன்பிறகு எப்போதும் சோகம்தான்!
அப்பா பேசுவதையே குறைத்துக்கொண்டார். அண்ணனோ, தங்கையும் தம்பியும் துயரத்தில் தொய்ந்துவிடக்கூடாதே என்ற நோக்கத்தில், அவர்கள் கவனத்தை வேறு விஷயங்களில் திருப்பியும், பிறந்த குழந்தையைக் கொஞ்சி மகிழ்வதிலும் திருப்பினான்.
அவன் திருமண வயதை தாண்டியும் அந்தப் பேச்சை எடுக்கும் சூழ்நிலையே இல்லாமல் வீடு இருளில் மூழ்கியது.
மறுநாள், ஜாதகப் புத்தகத்துடன் அக்காவும் தம்பியும் மாம்பலம் மகாதேவனை சந்தித்து, தங்கள் சோகத்தை சொல்லி பரிகாரம் உண்டா என வினவினர்.
அவர் ஜாதகப் புத்தகத்தை திறந்ததும், அவர் கண்ணில் பட்டது குடும்பத்தலைவர் சதாசிவத்தின் ஜாதகம்தான்!
சிறிதுநேரம் அதை தீர்க்கமாகப் பார்த்தவர், தலை நிமிர்ந்து, கண்ணனைப் பார்த்து " நீ போய் உன் நண்பனுடன் பேசிக்கொண்டிரு, எங்களுக்கு கொஞ்சம் நேரமாகும், சரியா?" என்று சொல்லி அவனை வெளியே அனுப்பினார்.
" ஏம்மா! இது உங்கப்பா ஜாதகம் தானே?"