கிடந்தது சாப்பிட்டிருப்பான், வாந்தியெடுத்து அதை வெளியிலே தள்ளிட்டான், அவனுக்கு ஒண்ணுமில்லே, நீ நிம்மதியாயிரு' என்று நகர்ந்துவிட்டாள்.
" பிருந்தா! வெரி குட் நியூஸ்! மாநில அமைச்சர் உன்னை நேரில் பாராட்ட இங்கு வந்துகொண்டிருக்கிறாராம்......நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி!"
தோழி உற்சாகத்துடன் சொன்னதை, பிருந்தாவின் குடும்பமே பின்தொடர்ந்து பிருந்தாவை கட்டியணைத்து முத்தமிட்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
பிருந்தாவுக்கு என்னவோ, அவர்களின் அணுக்கமே அருவருப்பாய் இருந்தது!
ஒரு வாயில்லா ஜீவனை, தங்களை நம்பி வாழ்கிறபோது, அதை நோயில் அவதியுறும்போது, வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வந்திருக்கிற ராட்சச குடும்பம் என வெறுத்தாள்.
மனதிற்குள், " பிராவோ! என்னை மன்னிச்சிடுறா! நீ உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது, நான் இங்கு ஆட்டத்திலும் பாட்டிலும் விருந்திலும் பாராட்டிலும் குளித்துக்கொண்டிருப்பது, நான் உனக்கு செய்யும் பச்சைத் துரோகம்! ஆனால், எப்படி இந்த சூழ்நிலையிலிருந்து தப்பிப்பது என தெரியவில்லையே!"
பிருந்தா, தனக்கு தலைவலி என்று ஓரமாக உட்கார்ந்து மற்றவர்களை தவிர்த்தாள்.
அவள் நெஞ்சமெலாம், பிராவோ! அவன் கண்ணுக்கு கண் பார்த்து வாலாட்டி தன் அன்பை தெரிவிக்கிற அழகே அழகு!
அவனை கட்டிக்கொண்டு பிருந்தா தூங்கும்போது, அவன் சின்னக் குழந்தைபோல, உடலை சுருட்டிக்கொண்டு தன்னிடம் ஒட்டிக்கொண்டு படுக்கிற பாசமும் பரிவும் ஈடில்லாத ஒன்று!
பிருந்தா அவனுக்கு உணவு அவன் எதிரே தட்டில் வைத்துவிட்டு சாப்பிடச் சொல்வாள். அவன் அசையமட்டான். அவன் காதுகளின் பின்புறம் தடவிக்கொடுத்து, கெஞ்சுவாள், கொஞ்சுவாள். ஊஹூம்!
பிருந்தா தன் கையால் உணவை எடுத்து அவன் வாயில் ஊட்டினால்தான் சாப்பிடுவான்! பிருந்தாவுக்கு சில நாட்களில் அவனுடைய பாசம் கண்ணில் நீரை வரவழைத்துவிடும்!
பிருந்தா கல்லூரியிலிருந்து வழக்கமான நேரத்துக்கு வீட்டுவாசலில் காத்திருப்பான், அவள் வந்ததும், அவள் முகத்தருகே பாய்ந்து முகத்தை நக்கிவிட்டுத்தான் அவளை வீட்டுக்குள்ளே நுழைய, அனுமதிப்பான்.
காலை நேரங்களில் பிருந்தா அவனை வெளியே அழைத்துச் செல்லும்போது, அவளை சௌகரியமாக நடக்கவிடாமல், காலருகே உரசிக்கொண்டு ஒட்டி வருவான். " என்னை நடக்கவிடுடா, பிராவோ!" எனக் கெஞ்சியபிறகு, சில வினாடிகள் சற்று விலகி நடப்பான். மீண்டும் ஒட்டுவான்.