அவனும் பிருந்தா ரொம்ப பிஸியாக இருக்கிறாள் என புரிந்துகொண்டு தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்ப்பான். ஆனால், பிருந்தாவை கைகுலுக்கவும், கட்டியணைக்கவும் நண்பர்களும் உறவினர்களும் அவளைச்சுற்றிக் கூடும்போது, அவனால் சும்மா இருக்கமுடியாது, அவர்கள் மத்தியில் அவனும் புகுந்துவந்து பிருந்தாவின் மடியில் அமர்வான்!
"பிருந்தா! உன்னைப் பாராட்டி கவிஞர் மாலி வாழ்த்து அனுப்பியிருக்கிறார், பிரமாதமாக இருக்கு, மைக்கில் படிக்கப்போகிறார்கள், கேளேன்......."
இயந்திரகதியில் செயற்கையாக பிருந்தா முகத்தில் சிரிப்பைக் கொண்டுவந்து, கவிதையைக் கேட்டாள்.
" தமிழ்நாட்டின் திலகமே!
திறமைகளின் உருவமே!
அறிஞர்களின் வாரிசே!
அறிவுச்சுடர் தலைவியே!
உன்னாலே யாம்பெற்ற
ஆனந்தம், பெருமைதனை
சொன்னால்தான் தெரியுமென
கவியெழுதி மகிழ்கின்றோம்!
வாழிய நீ வளமுடனே
மனமார வாழ்த்துகிறோம்!"
பிருந்தாவின் மனதில் ஒரு சொல்கூட பதியவில்லை!
இரண்டு மூன்று நாட்களாக, அவன் சற்று சோர்வாக இருந்தான், அடிக்கடி இருமினான், சில நாட்களாகவே அவனுடைய வழக்கமான உற்சாகமும் ஆட்டமும் ஓட்டமும் வாலாட்டலும் குறைந்திருந்தது!
வீட்டைவிட்டு பிருந்தா முதலில் கிளம்பி வந்துவிட்டாள், மற்றவர்கள் பின்னர் வந்தனர். அவள் அவசரமாக கிளம்பும்போது, அவன் வாந்தி எடுத்ததைப் பார்த்தாள். அவள் உடல் பதறியது. ஆனால், அவள் தோழிகள் அவசரத்தில் அவளை பலவந்தமாக அழைத்து வந்துவிட்டனர்.
பிருந்தாவின் மனது சரியில்லாமல், அவள் அண்ணனை அங்கு வந்து சேர்ந்தவுடன் விசாரித்தாள். அண்ணனோ, தனக்குத் தெரியாதென நழுவினான். அம்மாவைக் கேட்டாள், அவளும் அந்த விஷயத்தை அலட்சியமாக 'அது ஒண்ணும் இல்லை, ஏதாவது தரையிலே