அந்தக் குழந்தை, அந்தப் பாசப்பெருக்கு, அந்த பேரன்பு, நோயுற்று அவதியுறும்போது, தான் இங்கே கொண்டாட்டத்தில் இருப்பதை நினைக்க நினைக்க, பிருந்தா உடல் வியர்க்க வெதும்பினாள்.
அமைச்சர் வந்துவிட்டார். பிருந்தாவை கைகுலுக்கி பாராட்டி பரிசு அளித்துவிட்டு, " பிருந்தா! உனக்கு என்னவோ கேள்! செய்துதர தயாராயிருக்கிறேன், நீ தமிழ்நாட்டுக்கே பெருமை தேடித் தந்திருக்கிற அமுத கலசம்! கேள்!" என உற்சாகமாகப் பேசினார்.
பிருந்தாவின் குடும்பமும் தோழிகளும், பிருந்தா என்ன கேட்கப்போகிறாள் என ஆவலுடன் காத்திருந்தனர்.
" நான் உடனடியாக என் வீட்டை அடைந்து அங்கு நோயில் வாடும் என் வளர்ப்புப் பிராணியை வெடர்னரி டாக்டரிடம் அழைத்துச்செல்ல, தங்கள் அனுமதி வேண்டும்."
" அனுமதியா? நானே டாக்டருக்கு போன் செய்து உங்கள் வீட்டுக்கு வரவழைக்கிறேன், நீ என் காரிலேயே உன் வீட்டுக்கு செல்! நான் வேறொரு காரில் உன்னை தொடர்ந்து வந்து, உன்னுடனேயே இருந்து ஆவன செய்தபின் விடை பெறுகிறேன், சந்தோஷமா? எல்லோருக்கும் புரிகிறதா? இப்படிப்பட்ட ஒரு நல்ல ஜீவகாருண்யமுள்ள பெண், நம் நாட்டின் நிர்வாகத்தில் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறாள் என்பதை எண்ணி நாம் எல்லோரும் பெருமைப்படலாம்........."
கூடியிருந்தோர் கைதட்டலையோ, அமைச்சர் பேச்சின் இறுதிப் பகுதியையோ, கேட்க அங்கு பிருந்தா இல்லை, அமைச்சரின் காரில் அமர்ந்து, காரை ஸ்டார்ட் செய்யும்படி டிரைவரை விரட்டிக்கொண்டிருந்தாள்!