சிறுகதை - பெற்றோர்களே! உஷார்! - ரவை
மஞ்சுவுக்கு அஞ்சுவை மிகவும் பிடிக்கும், ஆனால் அஞ்சுவுக்கு மஞ்சுவை சுத்தமாக பிடிக்காது!
மஞ்சுவை வீட்டிலுள்ள யாவரும் நாள்முழுவதும் கொஞ்சியவண்ணம் இருப்பர்! இயற்கைதானே! பிறந்து சில மாதங்களே ஆன மஞ்சுவை பார்க்கும்போதே, எவருக்கும் அந்த சின்னஞ்சிறு மழலையை கையில் வாரியெடுத்து, உச்சி முகர்ந்து, முத்தம் தந்து, பார்த்து மகிழ்ந்து தங்களை மறப்பார்கள். மஞ்சு அத்தனை அழகு!
இப்படித்தான் நான்கு ஆண்டுகள் முன்பு பிறந்த அஞ்சுவையும் எல்லோரும் கொஞ்சினர், மஞ்சு பிறக்கிறவரையில்!
மஞ்சு பிறந்தவுடன் அத்தனை பாசமும் கொஞ்சலும் பச்சைக் குழந்தை மஞ்சுவின்மீது தாவியது. அது இயற்கை!
அதிலும் அஞ்சுவை நான்கு ஆண்டுகளாக, எந்நேரமும் கட்டியணைத்து, சிரித்து விளையாடி கொஞ்சிய அவள் தாயும் தந்தையும், மஞ்சு தாயின் வயிற்றில் கருவாக புகுந்ததிலிருந்து, இருவரும் பிறக்கவிருக்கும் சிசுவைப்பற்றியே நினைப்பதும், வயிற்றைத் தடவித் தடவி மகிழ்வதும், அஞ்சு அருகில் இருப்பதையே கண்டுகொள்ளாமல் தங்களுக்குள் பேசிக்கொள்வதும் அவர்களை அறியாமல் நேர்ந்துவிட்ட பிழை!
பிறந்ததிலிருந்து தன்னை மட்டுமே எப்போதும் சீராட்டி பாலூட்டி தாலாட்டியவர்கள், திடுமென அதை வெகுவாக குறைத்துக் கொண்டவுடன், இல்லை முழுவதுமாக நிறுத்திக் கொண்டவுடன், அஞ்சுவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஏக்கமும் அவளுக்கு மட்டுமே தெரியும்!
முதலில் அவளுக்கு காரணம் புரியாமல் இருந்தது. மஞ்சு தாயின் வயிற்றில் வளர வளர, அஞ்சுவிடம் தாய் விஷயத்தை தெரிவித்தாள்.
" அஞ்சு! உனக்கொரு தம்பியோ, தங்கையோ, பிறக்கப் போகிறான்! அந்தக் குழந்தையை பத்திரமா நீதான் கவனிச்சுக்கணும், அது அழுதால், அதுக்கு விளையாட்டுக்காட்டி சிரிக்கவைக்கணும்! அதுவும் நீயும் வளர வளர, ரெண்டுபேரும் ஒற்றுமையா இருக்கணும், சேர்ந்து பள்ளிக்கூடம் போகணும், அதை மற்ற குழந்தைகள் அடிக்காமலிருக்க நீ அதுக்கு பாதுகாப்பா இருக்கணும், நீ விளையாடறபோது, அதையும் சேர்த்துக்கணும், தினமும் அதுக்கு உனக்குத் தெரிந்த ரைம்ஸ், பாட்டு, டான்ஸ், பாடங்களை சொல்லித்தரணும், அதைவிட்டு நீ பிரியவே கூடாது, புரிஞ்சுதா?" என 'அது'க்கு அழுத்தம் பெற்றோர் கொடுக்கவே, அஞ்சுவின் ஏக்கம் அதிகமாகியது!
தனக்கு மட்டுமே ஏகபோகமாக இருந்த அத்தனை கொஞ்சலும் பாசமும் நேசமும் இனி இருக்கப் போவதில்லை, தான் அதை இழக்கப்போகிறோம், எனும் நினைவே அவள் மனதை