மற்ற குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பதிலே, அஞ்சு பெருமளவு தன் ஏக்கத்தை மறந்திருந்தாள்.
இருப்பினும், உடல் பலவீனத்தாலும் பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் பழகுவதாலும் திடுமென அஞ்சு, காய்ச்சலில் படுத்துவிட்டாள்.
அப்போதுதான், அஞ்சுவை சற்று கவனமுடன் பார்த்த பெற்றோர், அவள் உடல் மிகவும் மெலிந்திருந்ததை உணர்ந்தனர். ஆயினும், அந்த மாற்றத்துக்கு காரணம், சவலைக்குழந்தைகளுக்கு சாதாரணமாக ஏற்படுவதுதானே என அதிகம் பாராட்டவில்லை.
டாக்டரிடம் அழைத்துச் செல்லப்பட்டு அவர் பரிசோதித்தபின், அஞ்சுவின் உடல்நிலை மிகவும் பலஹீனமாக இருப்பதை கண்டுபிடித்து, அவள் பெற்றோரை டாக்டர் எச்சரித்தார்.
" எல்லா பெற்றோர்களும் செய்கிற தவறை நீங்களும் செய்திருக்கிறீர்கள். ஆனால், உங்கள் மகள், மற்ற குழந்தைகளைவிட சற்று அதிகமான 'சென்சிடிவ் சைல்டு'! அதனால், திடீரென அவளை கவனித்துக்கொள்கிற நேரத்தையும் அவளுடன் பழகுவதையும் குறைத்துக்கொண்டு, அந்த நேரத்தை அவள் தங்கை, சின்னக் குழந்தைக்காக நீங்கள் இருவரும் செலவிட்டதால், தவிர்க்கமுடியாத ஒன்றுதான், பெரிய குழந்தையின் மனநிலை பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைந்துவிட்டது. மாசுபடிந்த பள்ளிக்கூட சூழ்நிலையில், வைரல் காய்ச்சல் தொற்றிக்கொண்டுவிட்டது. நான் காய்ச்சல் குறைந்து உடம்பு நார்மலாவதற்கு உண்டான மருந்து தருகிறேன். ஆனால், அதுமட்டும் போதாது! நீங்கள் இருவரும் கொஞ்ச காலத்துக்கு அவளுக்காக அதிக நேரம் ஒதுக்கி அவளிடம் காட்டுகிற பாசத்தை பெருக்கி அவள் மனநிலையை சகஜநிலைக்கு மாற்றியாகவேண்டும்! இரண்டுமே உங்கள் குழந்தைகள். இரண்டுமே உங்களிடமிருந்து அன்பையும் பாசத்தையும் எதிர்பார்த்து ஏங்குகிற பருவமிது! கவனமாக இருங்கள்!" என நீண்ட பிரசங்கம் செய்தபோதுதான், தாயும் தந்தையும் தங்கள் தவறை உணர்ந்தனர்.
அஞ்சுவுடன் இருவரும் பழையபடி அன்பு செலுத்தினர். அவளையும் கொஞ்சினர். அவளுடனும் பேசி விளையாடினர்.
கொஞ்சம் கொஞ்சமாக, அஞ்சு மாற்றத்தைப் புரிந்துகொண்டு மகிழ்வுற்றாள். மனதில் குவிந்திருந்த வேதனையையும் வெறுப்பையும் நாளடைவில் கைவிட்டாள்.
அதற்கு முக்கிய காரணம், தாயும் தந்தையும் காட்டிய பாசமோ, செலவிட்ட நேரமோ மட்டும் காரணமில்லை; அவர்களுடன் கூடவே பச்சைக் குழந்தை, மஞ்சுவும், மழலை மொழியில் 'அன்சு' 'அன்சு' என்று அழைத்து, பிஞ்சுக்கரங்களால் தொட்டு, கொள்ளைச் சிரிப்பைத் தந்ததும்தான் காரணம்!
இப்போதெல்லாம், மஞ்சுவுடன் எப்போதும் சிரித்துப் பேசி மகிழ்வது, அவளைப் பெற்ற தாயும் தந்தையுமல்ல; அவளுக்குமுன் பிறந்த சகோதரி அஞ்சுதான்!
" இது எங்க பாப்பா! இதை யாரும் தொடக்கூடாது, தூக்கக்கூடாது, இனிமே என் தங்கச்சிக்கு எல்லாமே நான்தான்!"
குடும்பத்தில் மறுபடியும் குதூகலமும் நிம்மதியும் திரும்பியது!