இடத்திலிருந்து விருட்டென எழுந்துபோய்விடுவாள். தனிமையிலே, பொங்கிவந்த அழுகையை கொட்டித் தீர்ப்பாள்!
அஞ்சுவின் துரதிர்ஷ்டம், மெத்தப் படித்த தாயும் தந்தையும் அஞ்சுவின் மனவேதனையை கவனிக்கவேயில்லை!
கவனிக்காமலிருந்ததோடுகூட, வழக்கமாக அஞ்சுவின் தேவைகளை கவனித்துச் செய்கிற ஓரளவு நேசத்தையும், சின்னக் குழந்தைக்காக செலவிடும் நேரத்தினால், குறைத்துக் கொண்டனர்.
ஒருபுறம் தாய் சமையல், ஆபீஸ், சின்னப் பாப்பா என தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்க, மறுபுறம் தந்தையோ, ஆபீஸிலிருந்து திரும்பியதும், நேரே சின்னப் பாப்பாவை கொஞ்சுவதற்குப் போய்விடுவார்.
அஞ்சுவின் கண்கள் தொடர்ந்து தன் தாயும் தந்தையும் என்ன செய்கிறார்கள் என்பதை நோட்டம் விட்டுக்கொண்டே யிருக்கும்.
அவர்கள் பார்வையிலே தான் படவேண்டும், அப்போதாவது தன்னை அவர்கள் கவனிக்கிறார்களா என சோதிக்க, அஞ்சு அவர்கள் நடமாடுகிற வழியில் வேண்டுமென்றே குறுக்கே நிற்பாள்.
ஊஹூம்! அவளை பொருட்படுத்தாமலே பெற்றோர் தங்கள் கவனத்தை வேறெதிலோ செலுத்துவதை நினைத்து நினைத்து தனக்குள்ளே மருகுவாள்! எவரிடமும் சொல்லக்கூடமுடியாத தன் நிலை குறித்து தன்னிரக்கத்தில் கூனிக்குறுகிச் சாவாள்!
உண்பதிலும், விளையாட்டிலும், உறங்குவதிலும், இந்த மனநிலையின் பாதிப்பு அதிகமான காரணத்தால், அவள் உடல் இளைத்தது! முகம் கறுத்தது! கண்கள் உள்வாங்கின!
இப்படியே நாட்கள் கடந்து மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளாகின!
மஞ்சுவின் வளர்ச்சி நன்றாகத் தெரிந்தது, கேட்கவேண்டுமா? மஞ்சுவின் மழலையைக் கேட்டு மகிழ்வதிலும் அவளுடன் பேசி கொஞ்சுவதிலும் பெற்றோர் அதிக நேரம் செலவிட்டனர்.
இதையும் அஞ்சு கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். அவள் வேதனை பெருகியது!
மஞ்சு, தவழ்ந்துவந்து அஞ்சுவைப் பார்த்து சிரிப்பாள். அஞ்சுவின் ஆடையை தொட்டு இழுப்பாள். வெறுப்பில், அஞ்சு குழந்தையின் கையை தட்டிவிடுவாள்.
மஞ்சு தடுமாறி விழுவாள். ஆனால் அழமாட்டாள். மறுபடியும், அஞ்சுவை பார்த்து சிரிப்பாள். தன் பிஞ்சுக் கைகளை விரித்து அஞ்சுவை தூக்கிக்கொள்ளச் சொல்வாள். அஞ்சு முகத்தை திருப்பிக்கொண்டு நகர்ந்துவிடுவாள்.
காலம் வேகமாக கரைந்து, அஞ்சு துவக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். அங்கு உடன் படித்த