புண்படுத்தி ரணமாக்கியது.
இரவிலும் தனிமையிலும் கண்ணீர் சொரிந்தாள். தன்னை கட்டியணைத்து இரவில் உறங்கிய தாய், தற்போது சற்று தள்ளி படுப்பதும் உறுத்தியது, கேட்டால் "வயிற்றிலே வளருகிற பாப்பா மேலே உன் காலோ தலையோ மோதிவிடக்கூடாதில்லையா, அதனாலே தள்ளிப்படு!" என்று பதில் கிடைக்கிறது.
தனக்கு கிடைத்துவந்த அனைத்து பாசமும் பிரேமையும் தான் முற்றிலும் இழந்ததற்கு காரணமான குட்டிப் பாப்பா மஞ்சுவை, அஞ்சுவுக்கு பிடிக்காமல் போனதோடு, வெறுக்கவும் செய்தாள்!
அஞ்சுவின் இந்தப் போக்கை கண்டாவது, அவள் பெற்றோர் தங்களை திருத்திக்கொண்டு அஞ்சுவை சமாதானப்படுத்தியிருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தையும் அலட்சியத்தினால் இழந்தனர்.
எவ்வளவுக்கு எவ்வளவு அஞ்சு, மஞ்சுவை வெறுத்தாளோ அந்த அளவு சின்னப் பாப்பாவுக்கு அஞ்சுவின் நிழல் தெரிந்தாலே, குதூகலத்தில் கைகளும் கால்களும் உதைத்துக்கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். நிச்சயமாக அது இறைவனின் விளையாட்டே! ஏனெனில், உறவுமுறைகளையோ, தனிநபர்களையோ இனம் பிரித்து பார்க்கத் தெரியாத பருவத்திலேயே, சின்னப் பாப்பாவுக்கு மஞ்சுவுக்கு தன் அக்காவை பிடித்துப்போனதற்கு காரணத்தை அந்த ஆண்டவன்தான் விளக்கவேண்டும்!
" அஞ்சு! கொஞ்ச நேரம் பாப்பா அருகில் அமர்ந்து அதை கவனித்துக்கொள்! நான் ஐந்து நிமிஷத்திலே குளித்துவிட்டு வருகிறேன்" என்று தாய் கட்டளையிடும்போதெல்லாம், அஞ்சு வேண்டாவெறுப்பாக, பாப்பாவின் அருகில் அமர்வாள், ஆனால் அதை பார்க்கப் பிடிக்காமல், முகத்தை திருப்பிக் கொள்வாள்.
ஆனால், குட்டிப் பாப்பாவோ அஞ்சுவையே வைத்த கண் எடுக்காமல், பார்த்துக்கொண்டேயிருந்து, பரவசத்தில் உடம்பை அசைத்து இனம்புரியா ஒலியெழுப்பி குதூகலிக்கும்!
ஒருநாள், யதேச்சையாக இந்தக் காட்சியை அஞ்சுவின் பாட்டி பார்த்து அதிசயித்து, ஊரைக்கூட்டி தன் சின்னப் பேத்தியின் பாசத்தை திருப்பித் திருப்பி சொல்லி மகிழ்ந்தபோது, தவறாமல், அதைச் சொல்லும்போது, கூடவே ஒரு வார்த்தையும் சேர்த்துச் சொல்வாள்.
" இது இருக்கே, பெரிசு, அந்த அழகை ரசிக்காம, வேறெங்கேயோ பராக்கு பார்த்துக்கொண்டிருக்கும்."
அஞ்சுவுக்கு இந்த வார்த்தை ஈட்டியாய் இதயத்தில் குத்தி ரணப்படுத்தும்! அந்த