ஐந்துமணி வரை, ஆட்டோ ஓட்டியதில் சம்பாதித்த வருமானத்தை முனுசாமி எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இரவு ஆட்டோ ஓட்டுவதில் உள்ள ஆபத்துகளை, சொன்னால்தானே புரியும்!
இரவு கடைசி ரயிலில் வருபவர்கள், கடைசி பஸ்ஸில் வருபவர்கள், எப்படியாவது விரைவில் வீடு போய்ச் சேரும் அவசரத்தில், கேட்ட பணத்தை கொடுத்துவிடுவார்கள். அதனால் வருமானம் கூடுதலாக கிடைக்கும்.
அதுபோலத்தான், நைட் ஷோ சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்புபவர்களும், கேட்ட பணத்தை தருவார்கள்.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் ரௌடிகளின் தொல்லையும் அதிகம்!
ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டு, நெடுந்தூரத்துக்கு ஓட்டச் சொல்லி மிரட்டுவார்கள். பயந்துகொண்டு ஓட்டினால், இறங்கியபின் பணம் கேட்டால் கத்தியை காட்டி மிரட்டுவார்கள். ஆளை விட்டால் போதும் என்ற நிலை வந்துவிடும்.
இன்னொரு சாரார், விபசாரத்துக்கு ஆட்டோவை பயன்படுத்துவார்கள். பெண்ணுடன் புரோக்கர் வீதியில் சுற்றி வருவான். தனியாகச் செல்கிற வாலிபனைக் கண்டதும், ஆட்டோவை நிறுத்தச் சொல்லி புரோக்கர் இறங்கி, அந்த வாலிபனிடம் பேரம் பேசி, பணத்தை பெற்றுக்கொண்டு, அந்த வாலிபனை ஆட்டோவில் ஏறிக்கொள்ளச் சொல்வான்.
அந்த வாலிபனுக்கு தெரிந்த ஓட்டலில், ரூம் எடுத்து அங்கு அந்தப் பெண்ணை அழைத்துச் செல்வான்.
ஒரு மணி நேரம் கழித்து, அந்த ஓட்டலுக்கு திரும்பிச் சென்று, ஆட்டோ டிரைவர் அவர்களை பழைய இடத்துக்கு கொண்டு வந்துவிடவேண்டும். புரோக்கர் காத்திருந்து, அந்தப் பெண்ணை அழைத்துச் செல்வான்.
தாராளமாக பணம் கிடைப்பதால், ஆட்டோ டிரைவரும் சொன்னபடி செய்வார்களாம்!
சில சமயங்களில், ஆட்டோவை, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஓரமாக நிறுத்தி, டிரைவரை டீ குடிக்க காசு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆட்டோவையே ஓட்டல் அறையாகப் பயன்படுத்துவார்கள்.
இப்படி பலவிதமான ஆபத்துகளுக்கிடையேதான், முனுசாமி பிழைப்பை நடத்தி வந்தான்.
வருமானத்தை எண்ணிப் பாரத்துக் கொண்டிருந்த முனுசாமியின் கால்களை, எங்கிருந்தோ ஓடிவந்த ஒரு பெண், பிடித்துக்கொண்டு, தன்னை பின்னால் ஒரு ரௌடி துரத்தி வருவதாகவும் அவன் கையில் சிக்கினால், தன்னை அடித்து துன்புறுத்தி இழுத்துக்கொண்டு போய்விடுவான் என்றும், கதறி, காப்பாற்றும்படி கெஞ்சினாள்.