சிறுகதை - சுகம்! சுகம்!! இதுவே சுகம்!!! - ரவை
காலையில் கண் விழித்தவுடன், தலையை தூக்கி சுவர் கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான், பார்த்திபன்! மணி ஏழரை!
நள்ளிரவில் தண்ணீர் குடிக்க எழுந்தபோது, மணி இரண்டு!
அப்படியானால், ஐந்தரை மணி நேரம், தான் ஆழ்ந்து உறங்கியதை நினைத்துப் பார்த்தான்.
கனவுகள் எதுவுமில்லை! சுற்றிலும் நடந்தது எதுவும் தெரியவில்லை. கொசுக்கடி கூட உணரவில்லை! மரக் கட்டையாக, உணர்ச்சியற்றவனாக, உறங்கியிருக்கிறான், ஐந்தரை மணி நேரம்!
கண் விழித்தவுடன், நினைத்துப் பார்த்தால், அந்த ஐந்தரை மணி நேரமும் தான் அனுபவித்த சுகம், சொர்க்கத்தில்கூட கிடைக்காது என உறுதியாக நம்பினான்.
எப்படி அது தெரிந்தது என்று கேட்டால், கண் விழித்தவுடன், அவன் மனம் குதூகலமாயிருந்தது, உடம்பு புத்துணர்ச்சி பெற்றிருந்தது, புதிதாகப் பிறந்ததுபோல் ஒரு விடியலை, மாறுதலை, அவனால் உணரமுடிந்தது!
அப்படியென்றால்..........? உடல்-மனம்-புத்தி செயலற்றுப் போகும்போது, அந்த சுகம் பிறந்து, மலர்ந்து, வளர்ந்து, தழைக்கிறது!
செடியும் கொடியும் மலரும் ஆறும் மலையும் காற்றும் வானமும் பூமியும் தன்னுடன் ஐக்கியமாகி, இல்லை இல்லை, அவைகளுடன் தான் ஐக்கியமாகிவிட்டதுபோன்ற ஒரு நிலை, தனக்கு ஏற்பட்டிருந்ததாக உணர்ந்தான்.
ஓ! இந்த நிலைதான் 'பிரும்மம்' என அத்வைதிகளால் கூறப்படுகிறதோ!
அந்த நிலையை அடையத்தான், திருவண்ணாமலையில் ரமண மகரிஷி, பல ஆண்டுகள், தன்னைச்சுற்றி புற்று வளருகிற அளவுக்கு, அன்ன ஆகாரமின்றி, தவம் இருந்தாரோ! அந்த நிலையை அடைந்தபிறகு, உலகத்தில் வாழும் அனைவரும், தன்னைப்போல் அந்த நிலையை அடையவேண்டுமென உபதேசம் செய்தாரோ, வாழ்ந்து காட்டினரோ!
இப்படி சிந்தனையில் மூழ்கி நேரம் போவது அறியாமல் படுக்கையிலிருந்து எழாமலிருந்தவனை, அவன் மனைவியின் குரல், நடைமுறை உலகுக்கு திருப்பிக் கொண்டு வந்தது!
" மணி எட்டாகப் போகுது! ஆபீஸ் சீக்கிரம் போகணும்னு ராத்திரி சொன்னீங்களே, எழுந்து பல்லைத் விளக்குங்க! காபி ரெடி! அதை குடித்துவிட்டு மளமளன்னு கிளம்புங்க! மேலதிகாரிங்க இன்னிக்கி இன்ஸ்பெக்ஷன் வரப்போவதாக சொன்னீங்களே, ............"
பார்த்திபன் விருப்பமின்றி எழுந்து, இயந்திரமாக காரியங்களை செய்து, காலை உணவு சாப்பிட, டைனிங் டேபிளில் அமர்ந்தான்.