ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கிட்டு சாவறோம், இனிமே அவர் எதுவும் யாருக்கும் தரமாட்டார்..........."
மரகதம், தன் மகள் பத்மாவை, திரும்பிப் பார்த்தாள்.
அப்போதுதான், தாயின் கன்னத்தில் வழிந்த கண்ணீரைக் கண்டு பத்மா திடுக்கிட்டாள்!
" என்னம்மா! என்னாச்சு?"
" உங்கப்பா திடீர்னு வேதாந்தம் பேச ஆரம்பிச்சுட்டாருடீ! போகிற போக்கைப் பார்த்தால், சாயங்காலம், ஆபீஸ் முடிந்து, வீடு திரும்புவாரா, அல்லது, அங்கிருந்தே சந்நியாசம் வாங்கிண்டு, இமயமலைக்கு போயிடுவாரான்னு தெரியாம, பயமா இருக்குடீ!"
பத்மா வாய்விட்டு சிரித்துவிட்டு," அம்மா! நல்ல ஆளைப் பார்த்தியே சந்நியாசம் வாங்கிக்க! அப்பாவா? ஒரு வேளை பட்டினி போட்டாலே, தானே சமைத்து சாப்பிடற கேஸ்! அதை விடு! சாயங்காலம், கிளப்பிலே சீட்டு விளையாடாம, இருக்க முடியுமா, அவராலே? சரி சரி, வா! எனக்கு காலேஜ் போக நேரமாயிடுத்து, சாப்பிட என்ன பண்ணியிருக்கே?"
" உங்கப்பாவைப் பற்றி பயப்பட வேண்டாம்னா சொல்றே? ஏதோ பிரும்மம், அப்படி இப்படின்னு பேசறதை கேட்டா, பயமாயிருக்குடீ!"
" அம்மா! சில பேர் புதுசா ஏதாவது வித்தியாசமா படிச்சிட்டு, தனக்கு எல்லாம் தெரிஞ்சாமாதிரி மேதாவித்தனத்தை வெளிக்கு காட்டிப்பாங்க! தெரிஞ்சதை செயல்படுத்தச் சொன்னா, ஓடிப் போயிடுவாங்க, ஒளிஞ்சுக்குவாங்க பெண்டாட்டி சேலைத் தலைப்புக்குள்ளே! சரி, வாம்மா! எனக்கு லேட்டாவுது!"
பத்மா காலேஜ் கிளம்பியதும், மரகதம், மகன் சேகரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பார்த்திபனின் ஆபீஸ் நண்பர் காங்கேயனுக்கு போன் செய்து, பார்த்திபன் காலையில் தன்னிடம் பேசியதை தெரிவித்து, தன் பயத்தையும் கூறி, அவர் உதவியை நாடினாள்.
" கவலையே படாதீங்க! பார்த்திபன், ஆபீஸ் வந்து எங்க எல்லோரையும் பார்த்தவுடனேயே, வழக்கம்போல ஜோக் அடிச்சு சிரிச்சிகிட்டு, சகஜமா இருக்கான்! இப்ப வேலையிலே பிசியா இருக்கான், நான் அவனை கவனிச்சிக்கிறேன், கவலைப்படாதீங்க!"
பத்மா பெருமூச்சு விட்டாள். தன் வழக்கமான வேலைகளில் மனதை திருப்பினாள். திடீரென அவளுக்கு ஒரு யோசனை!
பக்கத்து தெரு ஜோசியரிடம், கணவனின் ஜாதகத்தை காட்டி, கிரக நிலைகளின்படி ஏதாவது மாறுதல் தெரிகிறதா என கேட்டுப் பார்த்தாலென்ன?
" ஜாதகப்படி பார்த்தால், சந்யாசியாகும் வாய்ப்புகள் இருக்கு! ஆனா, அந்த மாறுதல் ஏற்படும் காலத்தை சரியாக கணிக்க முடியவில்லை. கிரகங்கள் சரியாக இல்லை. ஒண்ணு செய்யுங்க!