சிறுகதை - இப்படியும் வாழ்கிறார்! - ரவை
இந்தக் கதை, ஊடகங்களில் வெளியான உண்மையான நிகழ்ச்சிகளின் அடிப்படையில் புனையப்பட்டது! வாசகர்கள் இந்தச் செய்தியை மேலும் பரப்பவேண்டும்
" அண்ணா! கடவுள் எங்களை கைவிடலே! சமயம் பார்த்து உங்களை இங்கு அனுப்பி எங்களை காப்பாற்றிட்டாரு!"
" எதுக்கும்மா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க? மனுஷனுக்கு மனுஷன் இந்த சின்ன உதவிகூட செய்யலேன்னா, வாழறதுலே அர்த்தமேயில்லே!"
" நீங்க யாரோ, நாங்க யாரோ! கூடப் பிறந்தவங்ககூட கைவிட்ட நேரத்திலே, எங்க மானத்தை காப்பாற்ற பெரிய உதவி செய்றீங்க.......அண்ணா! இனி என் மகள், உங்க மகள்! அவளை டில்லிக்கு அழைத்துக்கொண்டு போய், நல்ல வேலை வாங்கித்தந்து, எங்களுக்கு மறுவாழ்வு தரணும்!"
" என்னை நம்பினவங்களை நான், என் உயிரே போனாலும், கைவிடமாட்டேன்! உம்.....சுசீலா! உன் ஆதார் கார்ட், ஸ்கூல் சர்டிபிகேட், டிகிரி மார்க் லிஸ்ட், எல்லாத்தையும் மறக்காம எடுத்துக்க! உங்கம்மா, உன்னை நம்பித்தான், இனி வாழ்க்கையை நடத்தியாகணும். அதனாலே, நான் சொல்றபடி நடந்து சீக்கிரமே வேலையிலே சேருகிறதை நினைவிலே கெட்டியா முடிஞ்சிக்க! தங்கச்சி! அப்ப நாங்க கிளம்பறோம், அப்பப்ப, போன் பண்ணி தகவல் சொல்றோம்! சுசீலாவுக்கு மாசம் ஐம்பதாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிற ஏற்பாட்டை செய்யறேன், நிம்மதியா இரு! இரண்டே மாசத்திலே, நீயும் அங்கே வரத் தயாராயிரு!"
'எங்கிருந்தோ வந்தான்....இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!' என சுசீலாவின் விதவைத் தாய் பரிமளம் கண்ணில் நீர் மல்க, கைகூப்பி கடவுளுக்கு நன்றி கூறினாள்!
அவள் நிலை அப்படி! திடீரென கணவனை டிங்கு காய்ச்சலில் இழந்தபோது, உலகமே அவளுக்கு இருண்டு போனது! வயதுவந்த மகளுடன் எப்படி தன்னந்தனியே இந்த பொல்லாத உலகத்தில் வாழப்போகிறோம் என அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த நேரத்தில், முற்றிலும் அறிமுகமில்லாத அன்னியன் ஒருவன் தன் குடும்பத்தை காப்பாற்ற முன்வருவான் என அவளால் எப்படி நினைத்துப் பார்க்கமுடியும்?
டில்லி சேர்ந்ததும், சுசீலாவை அந்த 'எங்கிருந்தோ வந்த அண்ணா' கசியாபாத் எனும் பகுதியில், ஒரு விருந்தினர் விடுதியில், தங்கவைத்தார்!
ரிசப்ஷனில் அண்ணாவுக்கு தடபுடல் வரவேற்பு! அவர்கள் இந்தி மொழியில் பேசிக்கொண்டனர்.
" இந்தப் பெண், தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கு! இந்தி தெரியாது! ஆங்கிலத்தில் பேசினால்