இப்பவே டாக்டரை பார்த்துட்டு வரேன்" என கூறிவிட்டு, நகர்ந்தார்.
சுசீலாவை உள்ளே அழைத்துச் சென்ற மேரி, அவளை வேறொரு நர்ஸை அழைத்து, இந்தி மொழியில் " இது கிட்னி கேஸ்! வழக்கம்போல, நமக்கு பெரிய தொகை கிடைக்கும். மயக்க மருந்து தயார் பண்ணு! கொஞ்ச நேரத்திலே சார் வந்ததும், வேலையை முடிச்சிடலாம்......" என கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
அந்த நர்ஸ், சுசீலாவை பரிதாபமாகப் பார்த்தாள்.
" தமிழா?"
சுசீலா தலையசைத்தாள்.
" எனக்கு தமிழ் கொஞ்சம் தெரியும். ஏம்மா! உன்னை எதுக்கு கூட்டிவந்திருக்காங்கன்னு தெரியுமா?"
இல்லையென சுசீலா தலை ஆட்டியதும், அந்த நர்ஸ் ரகசியமாக சுசீலாவின் காதில், " உனக்குத் தெரியாம, உன் ரெண்டு கிட்னீயிலே, ஒண்ணை வெளியே எடுத்து, அவசரமா தேவைப்படுகிற நோயாளிக்கு பொருத்தப் போறாங்க, அந்த நோயாளி இவங்களுக்கு லட்சக்கணக்கிலே பணம் தருவாரு. ஏன்னா, இந்த நாட்டிலே ரெண்டு லட்சம் நோயாளிகளுக்கு கிட்னிமாற்று அவசரமா உயிர் பிழைக்கத் தேவைப்படுது, ஆனா, ஆறாயிரம் கிட்னிகள்தான் கிடைக்குது. இந்த மாதிரி, முப்பதாயிரம் லிவர் தேவைப்படுது, ஆயிரத்து ஐநூறுகூட கிடைக்கலே; இருதயமாற்றுக்கு ஐயாயிரம் நோயாளிங்க காத்திருக்காங்க, பதினைந்துகூட கிடைக்கலே! அதனாலே, கிட்னி, லிவர், ஹார்ட் கிடைக்க ஏற்பாடு செய்கிறவங்களுக்கு லட்சக்கணக்கிலே பணம் கிடைக்குது. உன்னை அழைத்துவந்த பெரிய மனுஷன் ஒரு புரோக்கர்! கொலைகூட பண்ணத் தயாராயிருப்பவன், ஏன்னா அவனுக்கு லட்சக்கணக்கிலே பணம் கிடைக்குது!"
" ஐயையோ! இப்ப நான் செய்யறது? எப்படி தப்பிக்கிறது?"
" கவலைப்படாதே! நான் சொன்னது எதுவும் உனக்கு தெரியாதமாதிரி நடந்துக்கோ! என்ன நடக்கிறதுன்னு பார்ப்போம், புரோக்கர் வந்ததும் தெரியும், அதுக்குப் பிறகு நீ தப்பிக்க நான் உதவி செய்கிறேன். யாரோ வராங்க, உஷார்!"
அண்ணா நுழையும்போதே, " மேரி! மேரி!" என்று அழைத்தார்.
உள்ளிருந்து மேரி ஓடிவந்தாள்.
" மேரி! நீ சொன்னது, சரியாப்போச்சு! அவங்களுக்கு உடனடியா ஒரு முஸ்லீம் பெண்தான் தேவையாம்! இவளையே முஸ்லீமா மாற்றிடுவோம்."
அண்ணா, சுசீலாவை தனியாக அழைத்து ரகசியமாகப் பேசினார்.