கையாலே எடுத்துவிடுவார் என்று பயந்த சுசீலா அந்த நர்ஸின் உதவியுடன் தப்பித்து ஊர் திரும்பினாள்.
தாய், மகளைக் கட்டியணைத்து, கண்ணீர் விட்டு, அழுதாள்.
" கடவுள்தான் சரியான நேரத்திலே நர்ஸ் ரூபத்திலே வந்து உன்னை காப்பாற்றினார்."
" அம்மா! இப்படித்தான், முதல்லே, கடவுள், உன் 'அண்ணா' ருபத்திலே வந்ததா சந்தோஷப்பட்டே! அந்த ரூபம் சாயம் வெளுத்தவுடனே, இப்ப நர்ஸ் ரூபமா? ஏம்மா! கடவுளுக்கு நாடகமாட, வேற ஆள் யாரும் கிடைக்கலையா? அனாதரவா நிற்கிற நம்மைத்தான் சோதிக்கணுமா?"
தாய் பதில் பேசாமல் விக்கித்து நின்றாள்.
"நீ ஏன் சோதனையா எடுத்துக்கிறே? உன்னை லட்சாதிபதியாக உயர்த்த கிடைத்த சந்தர்ப்பமா எடுத்துக்கணும், சுசீலா!"
திடுக்கிட்டு தாயும் மகளும் திரும்பிப் பார்த்தனர்.
" அண்ணா!"
" ஆமாம், தங்கச்சி! நான் என்ன ஊரிலே உலகத்திலே நடக்காத தவறான வழியா காட்டறேன்? நீங்க ரெண்டு பேரும் வசதியா வாழ நிறைய பணம் கிடைக்க சட்டபூர்வமான வழியைத் தானே காட்டறேன். தங்கச்சி! சுசீலா சின்னப் பொண்ணு, பயந்து ஓடி வந்துட்டா! நீதான் அவளுக்கு தைரியம் கொடுத்து என்கூட அனுப்பி வைக்கணும்......."
" அண்ணா! எங்களை விட்டுடுங்க! வறுமையிலே வாடினாலும், பரவாயில்லை! பொய் சொல்வது, சூது செய்யறது இதெல்லாம் வேண்டாம்! நீங்க நல்ல மனசோட செய்ய நினைத்த உதவிக்கு நன்றி! கிளம்புங்க!"
" உங்க இஷ்டம்! சுசீலாவை டில்லிக்கு அழைத்துப் போனதுக்கும், அங்கு கெஸ்ட் ஹவுஸிலே தங்கவைத்ததுக்கும் செலவான ஐம்பதாயிரம் ரூபாயை கீழே வைங்க! அதை நான் பொறுக்கி எடுத்துண்டு ஓடிப் போயிடறேன்......."
" ஐயையோ! ஐம்பதாயிரமா? நாங்க எங்கே போவோம், அத்தனை பணத்துக்கு?"
" அப்ப சுசீலாவை என்னோட அனுப்பிவை! நான் உனக்கு லட்சக்கணக்கிலே பணம்தரேன்!"
சுசீலா தன் தாயை தனியே உள்ளே அழைத்துச் சென்று ரகசியமாகப் பேசிவிட்டு தாயுடன் வெளியே வந்தாள்.
" மாமா! எங்க ரெண்டு பேரையுமே அழைத்துப் போறீங்களா?"
" கரும்பு தின்னக் கூலியா?"
" நாளைக்கு கிளம்புவோம்! இன்னிக்கு பெட்டி, படுக்கையை எடுத்து வைச்சுக்கிறோம், சரியா?"