மனைவி மரகதம் உணவை அவன்முன் வைத்துவிட்டு, அருகில் அமர்ந்து, " ஏன் ஒருமாதிரி மந்தமா சுறுசுறுப்பில்லாம இருக்கீங்க? ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா?" எனக் கேட்டாள்.
அவளை ஒருமுறை ஆழ்ந்து பார்த்துவிட்டு, " மரகதம்! மந்தமா இருந்தால், அதற்கு காரணம் கெட்ட கனவுன்னு நீ நினைக்கிறே! மந்தமா இல்லை, மரக்கட்டையா இருப்பதுதான் சுகம்! பரமசுகம்! என்று நான் தெரிந்துகொண்டேன்!"
" காலையிலேயே வேதாந்தமா? அரைகுறையா எதையாவது தெரிஞ்சிகிட்டு, பாதி கிணறு தாண்டறதை, விட்டொழிங்கன்னு திருப்பித் திருப்பி சொல்றேன், ஏன் அதை காதிலே வாங்கிக்க மாட்டேங்கிறீங்க? மேலதிகாரிங்களிடம் நல்லபடியா நடந்து, பிரமோஷன் வாங்கற வழியை பாருங்க! இருபது வருஷமா குமாஸ்தாவாகவே இருக்கீங்களே, வெட்கமாயில்லே?"
பார்த்திபன் அவளைப் பார்த்து சிரித்தான்.
" மரகதம்! நானும் பிரமோஷனுக்குத்தான் ஆசைப்படறேன், ஆனா நீ நினைக்கிற பிரமோஷனில்லே, திரும்பத் திரும்ப, பல பிறவிகளா மனித ஜென்மம் எடுத்துக்கொண்டிருக்கிறதிலிருந்து பிரும்மநிலைக்கு அழைத்துச் செல்கிற பிரமோஷன்!"
" ரமண மகரிஷி கல்யாணம் செய்துகொள்ளாத பிரும்மசரிய நிலையிலேயே தன் பாதையை தேர்ந்தெடுத்து தீவிரமா ஈடுபட்டார். உங்களைப்போல, பெண்டாட்டி-பிள்ளைகளோட குடும்பஸ்தனா, கடமைகளும் பொறுப்புகளும் ஏற்றுக்கொண்டபிறகல்ல!"
பார்த்திபனுக்கு அதிர்ச்சி! தன் மனதில் ஓடுகிற எண்ணங்களை முழுவதும் தெரிந்துகொண்டவள்போல, ரமண மகரிஷி பற்றி பேசுகிறாளே, அவளுக்கு எப்படி தான் நினைப்பது தெரிந்தது?
காலம் கூடிவருகிறது! தன் வாழ்வில் ஏதோ ஒரு முக்கிய திருப்பம் நடக்கப் போகிறது, என அவன் உள்மனம் கூறியது!
மேற்கொண்டு மனைவியிடம் பேச்சுக் கொடுக்காமல், மௌனமாக ஆபீஸ் கிளம்பினான்!
அவன் சென்றபிறகு, மரகதம் பூஜையறைக்குள் நுழைந்து, தெய்வங்களின்முன் நின்று கரங்கூப்பி, கண்ணில் நீர் மல்க, " இறைவா! என்னை சோதிக்காதே! நானும் என் குழந்தைகளும் எல்லோரையும் போல, நல்லமுறையில் வாழ, எங்களுக்கு நிம்மதி தர, என் கணவரை நீதான் கற்பனை உலகிலிருந்து கீழிறக்கி யதார்த்த நிலைக்கு கொண்டுவர வேண்டும்!" என பிரார்த்தித்தாள்.
" என்னம்மா! கடவுள்கிட்ட ஏதோ வரம் கேட்டே போல இருக்கு? கொடுத்தாரா? அவர் எப்படி கொடுப்பார்? அவர் ஏற்கெனவே அள்ளி அள்ளி கொடுத்ததையே சரிவர பங்கு போட்டுக்காம,