சிறுகதை - வித்தியாசமான அனுபவம் - ரவை
அந்த வீட்டிலே சமையற்காரியாக நுழைந்த முதல் நாள்!
அந்த வீட்டிலே கணவன், மனைவி, ஒரு குழந்தை!
என்னுடன் அந்த வீட்டு அம்மா பேசிக்கொண்டிருக்கையில், அந்தக் குழந்தை தாயிடம் வந்து " அம்மா! லைலாக்கு பசிக்குதும்மா! வாம்மா!" என்றது.
எனக்கு அந்தக் குழந்தை 'லைலா'ன்னு யாரைக் குறிப்பிடுகிறதுன்னு விளங்கவில்லை!
ஒருவேளை, அந்த வீட்டில் நாய் வளர்க்கிறார்களோ, அதன் பெயர் லைலாவோ!
" லைலாவுக்குத் தான், காலையிலே பால் கொடுத்தேனே, அதற்குள்ளே அதுக்கு பசிக்காதே.......சரி சரி, வரேன் இரு!"
அந்தம்மா என்னை சமையலறைக்கு அழைத்துச் சென்று, என்னென்ன பொருட்கள் எங்கெங்கே வைக்கப்பட்டுள்ளன என்பதை கூறிவிட்டு, என்னை விட்டு நகர்ந்து, ஃபிரிட்ஜிலிருந்து ஒரு பிஸ்கட் பேக்கட்டை எடுத்து, அந்தக் குழந்தையிடம் கொடுத்து "லைலா பிக் கேர்ல் ஆக வளர்ராளோனோ, அதுதான் அவளுக்கு பால் மட்டும் போதலை, அதனாலேதான் பசிக்குது, இந்தா! பிஸ்கட் பேக்கட்!"
அந்தக் குழந்தை உடனே பேக்கட்டை பிரித்து, பிஸ்கெட்டை சாப்பிட்டது.
" ஏம்மா! குழந்தை லைலாவுக்கு பசிக்குதுன்னு சொல்லிச்சு, நீங்களோ இந்தக் குழந்தைகிட்ட பிஸ்கெட்டை கொடுக்கறீங்க, அதுவும் அதை சாப்பிடுது, லைலா எங்கே?"
அந்தம்மா வாய்விட்டு சிரித்துவிட்டு, " அதுதான் இது" என்று செந்தில் கவுண்டமணி வாழைப்பழ காமெடி மாதிரி சொன்னாங்க.
நான் திருதிருன்னு விழித்தேன்.
" தாமரை! வேலையெல்லாம் கிடக்கட்டும், இங்கே வா! விளக்கமா சொல்றேன்!"
அந்தம்மா முன் அறைக்கு வந்து, சோபாவில் அமர்ந்து என்னையும் பக்கத்தில் அமரச் சொன்னாள். நான் தரையில் அமர்ந்தேன்.
" தாமரை! ஏன் தரையிலே உட்காருகிறாய், சோபாவிலே, என் பக்கத்திலே உட்காரு!"
" தப்பும்மா! நீங்க எனக்கு சம்பளம் கொடுக்கிறவங்க, நான் சமையல் செய்ய வந்தவள்! உங்களுக்கு பக்கத்திலே உட்காருவது, மரியாதையில்லேம்மா!"
அந்தம்மா மறுபடியும் கள்ளமற்று சிரித்தாள்.
" தாமரை! நாம் பொய்யான உலகத்திலே, வேஷம் போட்டு பழகறோம். இந்த மரியாதை, சம்பளம், வேலை என்பதெல்லாம் பாரம்பரியமா நமக்கு பெரியவங்க சொல்லிக் கொடுத்தது, யோசித்துப் பார்த்தால், இந்தப் பழக்க வழக்கங்கள் நம்மை தவறான வழியிலே நிம்மதி இழக்கவைக்கிறது,......."