ஜவுளிக்கடைக்குப் போய், உங்களுக்கு புதுசா டிரஸ் வாங்கிக்குங்க, சரியா?"
அதற்குமேலும் கண்ணீரை என்னால் அடக்கிக் கொள்ள முடியவில்லை!
அழுதுகொண்டே, அவங்க காலில் விழுந்தேன்.
" தாமரை! என்ன இதெல்லாம்? ஏன் அழுவுறே?"
" அம்மா! இந்தக் குடும்பத்திலே எல்லாமே வித்தியாசமா, உயர்வா, இருக்கும்மா! கோடானுகோடி மக்கள் வேற மாதிரி, போட்டி, பொறாமை, கோபதாபம், ஏழை-பணக்காரன் ஏற்றத்தாழ்வு, சாதி மத துவேஷம், வேலைக்காரன்-எசமானர் என்கிற வேறுபாடோட வாழும்போது, உங்களாலே மட்டும் எப்படிம்மா இப்படி அன்பா, பாசமா, தாராளமா, வித்தியாசமேயில்லாம பழக முடியுது?"
மேரிம்மா என் பேச்சைக் கேட்டு முகம் மலர்ந்து சிரித்தபோது, அவங்க என் கண்களுக்கு தெய்வமாகத் தெரிந்தாங்க!
" உன் பெயர் என்ன?"
" ஏம்மா தெரியாதமாதிரி புதுசா கேட்கறீங்க?"
" காரணமாகத்தான், சொல்லு!"
" என் பெயர் தாமரை!"
" உன் பெயர்தான் தாமரையே தவிர, நீ தாமரையில்லை! உன் புருஷன், உன் குழந்தை, உன் வீடு, உன் உடம்பு, இதேபோல, நீயில்லே, நீ வேறே, உன் பெயர், வீடு, உடம்பு, எல்லாம் வேறே! இந்த சத்தியத்தை வாழ்க்கை முழுவதும் மறக்காமல் இருக்கத்தான் என் குழந்தைக்கு 'நான்'னு சொல்லவேண்டிய நேரத்திலே எல்லாம், 'லைலா'ன்னு சொல்ல பழக்கியிருக்கேன்...தாமரை!
இந்த உலகத்தையும் சகல ஜீவராசிகளையும் படைச்ச இறைவன் கூடவே எல்லோருக்கும் தேவையான உணவு, உடை, வீடு எல்லாம் தந்திருக்காரு, ஆனால், மனுசன்தான் பேராசையினாலே, எளியவங்களை வலியவங்க அடித்து துன்புறுத்தி ஏழையாக்கி தாங்க பணத்தை சேர்த்துவைச்சிக்கிட்டாங்க, எதுவும் யாருக்கும் சொந்தமில்லே, எல்லாம் எல்லாருக்கும் சொந்தம்! உனக்கு பணம் தேவைப்படுகிறபோது, நான் பணத்தை என் கேஷ்பாக்ஸிலே பூட்டிவைச்சுக்கிறது, இறைவனை ஏமாற்றுவதுபோல! பைபிளிலும், குர்ரானிலும், பகவத் கீதையிலும் சொல்லியிருக்கிறது, 'ஏகம் சத்'! ஒன்றுதான் சத்தியம், மற்றதெல்லாம் நிழல்கள்! உண்மையல்ல!
தாமரை! இதை புரிஞ்சிக்கிட்டா, வருத்தம், கோபம், நீ, நான், அவன், அது எல்லாமே காற்றா ஆவியா வெட்ட வெளியிலே கலந்து கரைந்து போய்விடும்!....."
மேரிம்மா பேசிக்கொண்டே போனார்கள்.......எனக்கு தோன்றியதெல்லாம், மேரிம்மா சொல்றதுமாதிரி, எல்லோரும் புரிஞ்சிக்கிட்டா, இந்த பூலோகமே சுவர்க்கமாகிவிடுமே.......!