சிறுகதை - நேர்மைக்குப் பரிசு! - ரவை
" சோமு! நீ செய்கிற இந்த பெரிய உதவிக்கு, எத்தனை ஜன்மம் எடுத்தாலும் நான் அதற்கு ஈடு செய்யமுடியாது...."
உணர்ந்து சொன்னதனால், அவன் குரல் தழுதழுத்தது!
" வீரா! சரியான சமயத்தில் உனக்கு உதவி செய்கிற சந்தர்ப்பம், எனக்கு கிடைத்ததற்கு நான்தான் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும், உன் மகளின் கல்யாண ஏற்பாடுகளை கவனி!"
" சோமு! எவ்வளவு சீக்கிரம் இந்தக் கடனை திருப்பித் தரமுடியுமோ, அத்தனை விரைவில் தந்துவிடுகிறேன்......"
" அதைப்பற்றி பிறகு நிதானமாக யோசிக்கலாம், முதல்லே உன் மகள் கல்யாண வேலையை கவனி! கிளம்பு!"
வீரா என்கிற வீராசாமி வீட்டு வாசற்படியை தாண்டியிருக்கமாட்டான், அதற்குள் சோமுவின் மனைவி காயத்ரி கோபமாக சமையலறையிலிருந்து வெளியே வந்து, சோமுவின் எதிரே நின்றாள்.
" உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நாளைக்கு உங்கள் சிகிச்சைக்காக, டாக்டர் வேணுகோபால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகச் சொல்லி, ஆபரேஷன் செய்யும்படியாக இருக்கலாம், ஏகப்பட்ட டெஸ்ட்கள் எடுக்கணும், ஒரு மாசம் பெட்லே ஆஸ்பத்திரியிலே இருக்கணும், நிறைய பணத்தோட வந்து சேருங்கன்னு சொல்லியிருக்கும்போது, கையில் உள்ள அத்தனை பணத்தையும் நண்பருக்கு கடனா கொடுத்துட்டீங்களே, அவர் கடனை திருப்பித்தர வரையிலும், உங்க உடம்பிலே உள்ள நோய் வளராம அப்படியே இருக்குமா, உங்க உயிருக்கே ஆபத்து வராதா? நீங்க செய்திருக்கிற காரியம் எந்த அறிவுள்ளவனாவது செய்வானா? ஏன், உங்க நண்பர் வீராவே செய்வாரா? நாளைக்கு டாக்டரை பார்க்கணுமே, இப்ப பணத்துக்கு எங்கே போவீங்க?" என்று கேட்டு தலையில் அடித்துக் கொண்டாள்.
சோமு தலையை குனிந்துகொண்டு மௌனமாக இருந்தான்.
அவன் மனைவி காயத்ரியோ, தனக்கு ஆதரவுக்கு, வளர்ந்த பிள்ளைகள் தியாகு, ரவியை அழைத்து அவர்களிடம்,
" உங்கப்பா செய்திருக்கிற காரியத்தை பார்த்தீங்களா? இவர் ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமா நடந்துக்கறார்? கேளுங்கடா!" என உசுப்பிவிட்டாள்.
" அப்பா! நீதானே பல வருஷமா வயிற்றுவலியினாலே சாப்பிடக்கூட முடியாம, கஷ்டப்படறே, அந்த வயிற்றுவலிக்கான காரணத்தை இப்பத்தானே கண்டுபிடிச்சு உடனடியா சிகிச்சை எடுத்துக்கணும்னு டாக்டர் வேணுகோபால் வலியுறுத்தி சொல்லியிருக்கிறார், இப்படி சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை யாராவது நண்பருக்கு கடனா தருவாங்களா? நான்