ஆம், டாக்டர் ரங்கநாதன் அபாயச் சங்கு ஊதிவிட்டார். சோமுவின் உயிருக்கு பெரிய ஆபத்து வந்திருக்கிறதாம், பல வருஷமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், அலட்சியமாக இருந்துவிட்டதால், வயிற்றிலுள்ள சாதாரண கட்டி புற்றுநோயாகிவிட்டதாம், இப்போது உள்ள நிலையில், சோமுவின் உடல் அறுவை சிகிச்சையை தாங்கமுடியாதாம், ஆபரேஷன் டேபிளிலேயே உயிர் போகும் ஆபத்து உள்ளதாம், இந்த உண்மை சோமுவுக்கோ, காயத்ரிக்கோ தெரிந்தால், அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாதாகையால், தற்போதைக்கு அவர்களிடம் சொல்லவேண்டாம் என்று டாக்டர் சொன்னது, தியாகுவை நிலைகுலைய வைத்துவிட்டது.
" டாக்டர்! நீங்க எச்சரித்தபடி அப்பா, அம்மாவிடம் நீங்கள் சொன்னதை தெரிவிக்கவில்லை, இப்ப என்ன செய்யலாம்?"
"தியாகு! நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருக்கட்டும், இது! நான் அப்பாவுக்கு பேரியம் மீல் டெஸ்ட், அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் எடுக்கச் சொல்லி நாட்களை தள்ளுகிறேன், அப்பாவுக்கு வயிற்றுவலி குறையவோ, அதிகம் ஆகாமலிருக்கவோ, மருந்து, மாத்திரை தரேன், அதை ஒழுங்காக சாப்பிட்ட்டும், மற்றதை ஆண்டவன் கையிலே விட்டுவிடுவோம்.."
" சரி, டாக்டர்!"
" தியாகு! நான் உன்னை அழைத்தது, இதற்கு மட்டுமல்ல, இன்னொரு விஷயத்திற்காகவும்கூட!"
" சொல்லுங்க, டாக்டர்!"
" ஐந்து வருஷம் முன்பு, என் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை பதிவு செய்யவேண்டிய சூழ்நிலையின்போது, புரோக்கர்கள் என்னிடம் மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். சரி போனால் போகிறது, அலைச்சல், நேரம் எல்லாம் மிச்சம். அந்த நேரத்தில் என் தொழிலில் அந்த தொகையை சம்பாதித்துவிடலாம் என்று நான் மனதளவில் தயாராயிருந்தபோது, உங்கப்பா என்னைப் பார்க்க வந்திருந்தார், சிகிச்சைக்காக! அவரிடம் இதை சொன்னேன்.
என்ன நடந்தது, தெரியுமோ? என்னிடம் ஒரு பைசாகூட லஞ்சம் வாங்கிக்கொள்ளாமல், பத்திரத்தை பதிவு செய்து கொடுத்தார், உங்க அப்பா! என்னால் அதை மறக்கமுடியாது, அதனாலே இப்போது உங்கப்பாவுக்கு சிகிச்சைக்காக எவ்வளவு செலவு ஆனாலும், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். என் க்ளினிக்கிலே பணம் கேட்காமல் செய்து தருகிறேன். இதுவும் நம் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கட்டும், சரியா?"