சாமான்கள் கொடுத்திருக்கலாம், இல்லத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிதான்.....என நினைத்துக்கொண்டே, லாரியின் உள்ளே பார்த்தேன்!
முதலில் கண்ணில் பட்டது, காலொடிந்த மேஜை, நாற்காலி,!
அதன் பக்கத்தில் ஒரு துணி மூட்டை! அதை பிரித்துப் பார்த்தேன்!
சிறுவரிலிருந்து பெரியவர்கள் வரை, ஆண்பெண் இருபாலாரின் உடையும் தெரிந்தது!
பலே! உபயோகமானதாகவும் தந்திருக்கிறார்கள் என சந்தோஷத்துடன், ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன்,............
'மருந்துக்குக்கூட' என்று சொல்வார்களே, அதுபோல சாம்பிளுக்குக்கூட, உடனடியாக அணிந்துகொள்ளக்கூடிய ஒரு, ஆம், ஒரு ஆடைகூட இல்லை! கிழிந்தது, கரைந்தது, சாயம் போனது, கரைபடிந்தது இத்யாதி இத்யாதி.....
தூக்கி எறியவேண்டியவைகளை தானம் என்ற பெயரில் லாரிக்காரனிடம் தந்திருக்கிறார்கள்!
போகட்டும், வேறு ஏதாவது தேறுமா என நோட்டம் விட்டேன், ஆங்! ஒரு பெரிய தகர டப்பா கண்ணில் பட்டது!
அதில், ஏதாவது நல்ல உணவுப் பொருள் இருக்கலாம் என திறந்து பார்த்தேன்...........
திறந்தவுடனேயே, வயிற்றை குமட்டுகிற துர்நாற்றம்!
உடனேயே டப்பாவை மூடிவிட்டேன்.........
லாரி டிரைவரை அழைத்தேன்.
" உன்னை யார் இங்கு அனுப்பியது?"
" யோவ்! வடையை எண்ணச்சொன்னா, தொளையை எண்றே! தானமா கொடுத்தா, எடுத்து அள்ளிப் போடுவியா, பெரிசா கேள்வி கேட்கிறே?"
" சரி, சரி, கோவிச்சிக்காதே! இப்ப இங்க இதையெல்லாம் இறக்கிவைக்க இடமில்லே, நீயே எடுத்துக்கிட்டுப்போய் அனுப்பினவங்களிடம் சொல்லிடு!"
" ஏன்யா! என்னை வேலைவெட்டி இல்லாதவன்னு நினைச்சியா? தோட்டம், தோப்பு, சோலையா இடம் இருக்கு, இடமில்லேன்னு பொய் சொல்றே?"
என்று பேசிக்கொண்டே, லாரியிலிருந்த எல்லாப் பொருட்களையும் கீழே கொட்டிவிட்டு லாரியை திருப்பிக்கொண்டு போய்விட்டான்!
அனாதைகளை உறவினர் மட்டுமல்ல, எவருமே மதிப்பதில்லை என்பதற்கு இதைப்போல நிறைய நிகழ்வுகள்!
அமர்ர் கல்கி அவர்கள் பாடிய இனிமையான தனிமையில், இவைகளை சிந்தித்துப் பார்த்து சிரித்துக்கொள்வேன்!