(Reading time: 8 - 16 minutes)

 நேற்று இப்படித்தான் ஒரு முதியவர் என்னிடம் வந்து தன் குறைகளை சொல்லி வருத்தப்பட்டார்.

 நியாயமான குறைகள் தான்! காலமெல்லாம் மூட்டை தூக்கி கஷ்டப்பட்டு மகனை படிக்கவைத்து ஆளாக்கி திருமணம் செய்துவைத்தால், வந்தவளின் பேச்சிலும் அழகிலும் மயங்கி, பெற்ற தகப்பனை முதுமையில் வீட்டைவிட்டு துரத்திவிட்டானாம் மகன்!

 அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி அனுப்பவேண்டுமே!

 பேசிக்கொண்டே அவரை சிறுவர்களும் குழந்தைகளும் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றேன்.

 பிறந்து சில நாட்களே ஆன, ஒரு பச்சைக் குழந்தை! அருகிலிருந்த ஆயாவிடம் எனக்கு எதுவுமே தெரியாத விஷயம் போல, குழந்தையைப் பற்றி விசாரித்தேன், முதியவரின் முன்னிலையில்!

 " அதை ஏன் கேட்கறீங்க? பிரசவமாகி சில மணி நேரத்திலே, ரயில்வே ஸ்டேஷனிலே துணியைச் சுற்றி விடப்பட்ட பச்சைப்புள்ளைங்க! பாவம்! தாய்ப்பாலுக்கு அழுவுது, பசும்பாலை பாலாடையிலே போட்டுக் கொடுத்தா, குடிக்கத் தெரியலே, வாயிலிருந்து வழியுது, அழுதுகிட்டே இருக்கு! இந்தப் பாவம் பெற்றவளை சும்மா விடுமா? மாரியாத்தாதான் அவளை கேட்கணும்.........."

 முதியவரைப் பார்த்தேன். அவர் தன் துயரை மறந்து குழந்தையின் நிலை கண்டு பரிதாபம் கொண்டபோது, அவரை தனியே அழைத்துப்போய் பேசினேன்.

 " ஐயா! நாம் எப்போதுமே நமக்கு வரும் துன்பத்தைப்போல, வேறு எவருக்குமே வராதமாதிரி விசனப்படுகிறோம், உண்மையில் நடப்பவைகளை அறிந்தால், நம் துக்கம் அப்படி ஒன்றும் பெரிதல்ல என்று புரியும். இப்ப பார்த்தோமே, இந்தக் குழந்தையை பெற்றவள் ஏன் பெற்றவுடனேயே தூக்கி எறிந்தாள் என்பதெல்லாம் சாதாரண விஷயம்!

 இந்தக் குழந்தை ஆயுள் முழுக்க தன் தாய்தந்தை யாரென தெரியாமலே, தவிக்கப் போகிறது! அதற்கு யார் என்ன சமாதானம் கூறமுடியும்?

 அதன் மதம், சாதி, குலம், கோத்திரம் எதுவுமே இல்லாமல் என்னென்ன துன்பங்கள் அனுபவிக்கப்போகிறதோ!

 இந்தக் குழந்தை ஆணாக இருந்தாலாவது, ஓரளவு சமாளிக்கலாம். பெண் குழந்தையாயிற்றே, கற்பனை செய்து பார்த்தாலே குலை நடுங்குகிறது!

 சொல்லுங்கள்! உங்கள் துன்பம் இதன் முன்பு மாயமாய் மறைந்துபோய்விடும் இல்லையா?

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.