சிறுகதை - எக்ஸ்பையரி டேட்! - ரவை
" சரவணா! தாத்தாவுக்கு மருந்து கொடு!"
சரவணன் ஓடிப்போய் அலமாரியிலிருந்து மருந்து பாட்டிலை எடுத்து வந்தான்.
எடுத்து வரும்போதே, மருந்தின் எக்ஸ்பையரி டேட்டை கவனித்துக் கொண்டே வந்தான்.
" சரவணா! பாட்டில்லே என்ன பார்க்கிறே?"
" தாத்தா! எக்ஸ்பையரி டேட் பார்த்தேன்,......வந்து, தாத்தா! மருந்துகளை தயாரிக்கும்போதே, அவைகளின் எக்ஸ்பையரி டேட்டையும் குறித்து வெளியே விற்பனைக்கு அனுப்புகிறமாதிரி, கடவுளும் நம்மை படைக்கிறபோதே நம்ம எக்ஸ்பையரி டேட்டையும் குறித்து அதை நம்ம உடம்பிலே ஒட்டி அனுப்பியிருக்கணும், இல்லையா? ஏன் அப்படி செய்யலே? தப்பில்லே?"
தாத்தாவுக்கு தன் பேரனின் கேள்வி ஆச்சரியத்தை தந்தது!
" மரகதம்! இங்கே வாயேன்! உன் பிள்ளை, என் செல்லப் பேரன், எத்தனை புத்திசாலித்தனமான கேள்வியை கேட்கிறான், பாரேன்!"
" அப்படி என்ன கேட்கிறான், பிரமாதமா?" எனக் கேட்டவாறே, சரவணனின் தாய் வந்தாள்.
" சரவணா! நீயே சொல்லு, அம்மாவுக்கு!"
" அம்மா! தயாரிக்கப்படுகிற பொருட்களை வெளியே விற்பனைக்கு அனுப்பும்போது, அந்தப் பொருட்களின் காலாவதி தேதியையும் குறித்து, வாங்குபவர்களுக்கு தெரியும்படியா பாட்டில் மேலே அதை தெரிவிக்கிறாப்போலே, கடவுளும் நம்மை படைத்து உலகத்துக்கு அனுப்பறபோதே, நம்ம உடம்பிலே அழிக்கமுடியாதபடி நம்ம காலாவதி தேதியையும் நமக்கு தெரியும்படியா குறித்து அனுப்பியிருக்கணும், இல்லையா? ஏன் அப்படி செய்யலே? கடவுள் செய்வது சட்ட விரோதம் இல்லையா?"
மரகதம் மகனை கட்டியணைத்து முத்தமிட்டு,
"சரவணா! இந்தக் கேள்விக்கு தாத்தாவில் ஆரம்பித்து, அப்பா, பாட்டி, உங்க அண்ணன், அக்கா எல்லோருடையும் பதிலை யும் கேட்டு தெரிந்தபிறகு கடைசியா என்னிடம் வா! எனக்கு தெரிந்ததை சொல்றேன்......." என்றவாறே சமையலறைக்கு திரும்பிவிட்டாள்.
சரவணன் தாத்தாவுக்கு மருந்து கொடுத்துவிட்டு, மருந்து பாட்டிலை அஅலமாரியிலே வைத்துவிட்டு, தாத்தாவின் எதிரே அமர்ந்தான்.
" முதல்லே, நீ சொல்லு, தாத்தா! நீதான் எல்லாரையும்விட மூத்தவர். உனக்குத்தான், அதிகமா தெரிஞ்சிருக்கணும்......."
" சரவணா! நான் பதில் சொல்வதற்கு முன்பு, நீ ஒரு பதில் சொல்லு! நீ ஒரு கேள்வி கேட்டிருக்கியா? ரெண்டா?"
சரவணன் விழித்தான்.