சிறுகதை - எனக்கெனப் பிறந்தவனே! - ரவை
கன்னிப் பெண்கள் உள்ள எல்லா வீட்டிலும் நடப்பதுதான், அந்த வீட்டிலும் நடந்தது.
பெண்ணுக்கேற்ற மணமகனை நாடி, விளம்பரம் தந்ததற்கு, அப்பப்பா! இத்தனை விண்ணப்பங்களா?
அப்பா, அம்மா, அண்ணன், கன்னிப்பெண் நால்வரும் அமர்ந்து, ஒவ்வொன்றாகப் படித்து, பொருந்தாதுன்னு தோன்றியவைகளை ஒதுக்கி, பொருத்தமாக உள்ளவற்றை மட்டும் நால்வரும் தனித்தனியாக எடுத்து வைத்தனர்!
முதலில் பெண்வீட்டார் கொடுத்த விளம்பரத்தை பார்ப்போம்:
பெயர்: சுந்தரி
பெண்ணுக்கு வயது இருபத்தைந்து!
கட்டிடக்கலை (B.Arch) பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ.யும் முடித்திருக்கிறாள்.
சங்கீதம் முறையாக கற்று இனிமையாக பாடக்கூடியவள்!
மாநிறம். உயரம் 5'6".
நன்கு தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், இந்தி!
மணமகனிடம் எதிர்பார்ப்பவை:
- நல்ல படிப்பு.
- நல்ல உத்தியோகம்.
- நல்ல குடும்பத்தில் பிறப்பு.
- மணமகள், திருமணத்துக்குப் பிறகு, வேலை பார்க்க சம்மதம்.
முதலில், அப்பா, தான் தேர்ந்தெடுத்தவற்றைப் படிக்க முனைந்தபோது, அண்ணன் குறுக்கிட்டான்.
" அப்பா! ஒரு நிமிஷம்! முதலில் கட்டிக்கப் போறவனை, தங்கச்சி எப்படி தேர்ந்தெடுத்திருக்கிறாள்னு பார்ப்போம்! அவள் மனசிலே என்ன இருக்குன்னும் தெரிஞ்சிடும்"
அப்பா, அம்மா இருவரும் அண்ணனின் யோசனையை பாராட்டினர்.
தங்கச்சியிடமிருந்து அவள் தேர்ந்தெடுத்தவற்றை அண்ணன் கேட்டு வாங்கிப் பார்த்தான்.
தேர்ந்தெடுக்கப்பட்டவைகளுக்கு மதிப்பெண்ணும் தந்து வரிசைப்படுத்தியிருந்தாள்.!
அவற்றில் முதல் மதிப்பெண் பெற்றதை எடுத்து அண்ணன் படிக்கத் தொடங்கினான்.
"பெயர்: சாலமன்"
அப்பா, அம்மா, அண்ணன் மூவரும் திடுக்கிட்டு அதிர்ச்சியில் எழுந்து நின்று அவளைப் பார்த்தனர்.
அந்தப் பார்வையில் ஆயிரம் வினாக்கள்!