" அம்மா! உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? இந்தக் காலத்திலே இப்படியொரு பையனுக்கா உன் பெண்ணை கல்யாணம் செய்துவைக்க நினைக்கிறே? த்தூ!"
" ஏன்டா! இவனுக்கென்ன குறைச்சல்? பெற்றவங்களை மதிக்கிற பிள்ளை! வரப்போறவளை 'வீட்டிலே ராணி மாதிரி வச்சிப்பேன், வேலைக்குப் போய் அவ கஷ்டப்படக்கூடாது'ன்னு சொல்கிற பிள்ளை, அதோட பிறந்த நட்சத்திரத்தை கவனிச்சியா? சுவாதி! ஓகோன்னு இருப்பான், துலாம் ராசி! துலாக்கோல் போல, நடுநிலையான தர்மத்தை காப்பாற்றுவான், இவன் நம்ம மாப்பிள்ளையாக வந்துட்டான்னா, நாம நம்ம பெண்ணைப்பற்றி கவலையே படவேண்டாம்...."
" நிறுத்து! முதல்லே, அவன் போட்டோவை பாரு, அடுப்புக்கரி, இவனைவிட நிறமாயிருக்கும்!"
" பிள்ளைகளுக்கு எதுக்குடா நிறம், அழகு, எல்லாம்? கெட்ட பழக்கம் எதுவும் இல்லாம, குழந்தைகுட்டிகளை பெத்துண்டு, பெற்றவங்களையும் கடைசிவரை, கூட வைத்து காப்பாற்றுவான்டா, ...."
" அடியே! என்னை நீ கல்யாணம் செய்துகொண்டதுக்கு, பெற்ற மகளை பழி வாங்காதேடி! நான் கறுப்புதான்! குமாஸ்தா தான்! என்னை பெற்றவங்களை அவங்க கடைசி மூச்சு உள்ளவரையிலும் என்னுடனேயே வைத்துக்கொண்டு காப்பாத்தினது, உண்மைதான்! ஆனா, இப்ப காலம் மாறிப் போயிடுத்துடீ! நீயும் உன் மகளும் எதிர் துருவங்கள்!
அவ சாதி, மதம் எதையும் பார்க்கவேண்டாங்கறா! நல்லா படிச்சு, பெரிய பதவியிலே இருக்கணும்னு எல்லா பெண்களையும் போல, ஆசைப்படறா! அத்துடன், தன் அண்ணனும் தன்னுடன் கூடவே வாழணும்னு ஆசைப்படறா!
அவ செலக்ட் பண்ணியிருக்கிற குடும்பத்திலேயே உன் பிள்ளைக்கும் நிறைய படித்து பெரிய பதவியிலே இருக்கிற பொண்ணு இருக்கிறாள்டீ! சொல்றதை கேள்டீ! உனக்கு ஒருநாள் டயம் தரேன், எதுக்கு? நீ சொல்கிற இடத்துப் பையனை மறக்கறதுக்கு!
பிறகு, நாம மூணு பேருமா, உன் பெண்ணோட கலந்து பேசி எல்லோரும் ஏற்றுக்கிறா மாதிரி, நல்ல முடிவெடுப்போம், தியாகு! இதுதான் என் முடிவு! உனக்காச்சு, உங்கம்மாவுக்காச்சு! என்னை விடுங்க!"
அப்பா சிவராமன் வெளியே சென்றுவிட்டார்.
தன் அறைக்குள் இருந்தபடியே, மகள் சுந்தரி வெளியே நடந்த உரையாடலை முழுவதும் கவனமாக கேட்டாள். தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
மறுநாள் நால்வரும் மீண்டும் கூடினர்.